Last Updated : 15 Jun, 2022 05:49 PM

 

Published : 15 Jun 2022 05:49 PM
Last Updated : 15 Jun 2022 05:49 PM

புதுச்சேரி காங். அலுவலக தர்ணாவில் வாக்குவாதம்: முன்னாள் அமைச்சர் வெளியேறி சாலையில் அமர்ந்து போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் நடந்த தர்ணாவில் வாக்குவாதம், கருத்து மோதல் ஏற்பட்டு முன்னாள் அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து 3-வது நாளாக இன்று ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பொய்வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்து புதுவை காங்கிரசார் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் உள்ளே காங்கிரஸார் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதன்படி, புதுவையிலும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் நீலகங்காதரன், அனந்தராமன், நிர்வாகிகள் ரகுமான், கருணாநிதி, தனுசு, இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது தர்ணாவில் பேசிய முன்னாள் அமைச்சர் கந்தசாமி, "புதுச்சேரியில் கட்சியில் இருக்கும் வயதானவர்கள் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்" என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் பதில் தந்தார். அதற்கு, எத்தனைகாலம்தான் ஏமாற்றுவீர்கள் என்று கந்தசாமி பதிலளித்ததற்கு நாராயணசாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கந்தசாமி ஆதரவாளர்களும் பதிலளிக்க வாக்குவாதம், கருத்து மோதல் ஏற்பட்டது.

"போராட்டத்தை அலுவலகத்துக்குள் நடத்துவதில் என்ன பயன் - மக்களுக்கு தெரியப்படுத்த சாலை அல்லது ரயில் மறியல் செய்வோம்" என்று முன்னாள் அமைச்சர் கந்தசாமி கூறினார். கட்சி அலுவலகத்தில்தான் போராட்டம் நடத்த கட்சித் தலைமை கூறியதாக அங்கிருந்த தலைவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் கந்தசாமி அலுவலகத்தில் இருந்து வெளியேறி கட்சி அலுவலகத்துக்கு எதிரில் சாலையில் சேரை போட்டு அமர்ந்து தர்ணா செய்தார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் அமர்ந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் உள்ளேயும், சாலையிலும் இரு பிரிவாக போராட்டம் நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x