சென்னையில் புதிதாக உருவானது கோயம்பேடு காவல் மாவட்டம்

சென்னையில் புதிதாக உருவானது கோயம்பேடு காவல் மாவட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் கொளத்தூர் காவல் மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக கோயம்பேடு காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களை குறைக்கவும், நிர்வாக வசதிக்காகவும் கடந்த ஜனவரியில் சென்னை பெருநகர காவல் துறை, சென்னை, தாம்பரம், ஆவடி என 3 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி, சென்னை காவல் ஆணையரகத்தின்கீழ் 104, ஆவடியில் 25, தாம்பரத்தில் 20 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன.

புதிதாக பிரிக்கப்பட்ட காவல் நிலையங்களை மறுசீரமைப்பு செய்யும் வகையில் சென்னை காவல் ஆணையரகத்தில் கொளத்தூர் காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு புதிய காவல் துணை ஆணையர் நியமிக்கப்பட்டார். மறுசீரமைப்பின் அடுத்தகட்டமாக புதிதாக கோயம்பேடு காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் கோயம்பேடு, வளசரவாக்கம் ஆகிய காவல் சரகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் விருகம்பாக்கம் காவல் சரகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு காவல் மாவட்டத்தில் 6 காவல் நிலையங்களும் அதனுடன் சேர்த்து கூடுதலாக 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in