Published : 14 Jun 2022 02:21 PM
Last Updated : 14 Jun 2022 02:21 PM

மதுரை காமராஜர் பல்கலை. உத்தரவு வாபஸ் | ”அனைத்துக் கல்லூரிகளிலும் 69% இடஒதுக்கீடு முறைதான்” - அமைச்சர் பொன்முடி விளக்கம்

சென்னை: " பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்லூரிகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை சரியாக செயல்படுத்த வேண்டும்" என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அனைத்து கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு முறை எப்படி பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் கூறியிருக்கிறார். இடஒதுக்கீடு முறை சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவையும் நியமித்திருக்கிறார். அதன் அடிப்படையில் நாங்கள் எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

சில இடங்களில், சில துணைவேந்தர்கள் மத்திய அரசின் உதவி கிடைக்கிறது என்பதற்காக சில நிகழ்வுகளை அறிவித்துள்ளனர். இதனை எதிர்த்து பத்திரிகையில் தலையங்க செய்திகள்கூட வந்துள்ளது. அதேபோல பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை தமிழக அரசு மிக தெளிவான ஒரு கொள்கையில், தமிழக முதல்வர் செயல்பட்டுக் கொண்டுள்ளார். 69 சதவீத இடஒதுக்கீட்டில் மிகத் தெளிவாக இருக்கிறார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேசிவிட்டோம். குறிப்பாக எம்எஸ்சி பயோ டெக்னாலஜி படிப்பில், இந்த படிப்பு 4 பல்கலைக்கழகங்களில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில், சென்ற ஆண்டே 45 இடங்களில், 10 இடங்களுக்கு மத்திய அரசில் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், நிதி பகிரப்படுகிறது. எனவே அந்த இடங்களுக்கு EWS முறை (உயர் வகுப்பு ஏழைகளுக்கான இடஒதுக்கீடு) பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர். இதற்கு கடந்த ஆண்டே தமிழக முதல்வர் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு தெளிவாக கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு உதவித் தொகை வழங்குவதால், EWS இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றக்கூறுவது தவறு என்று முதல்வர் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு இதுதொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த உத்தரவை மாற்றிவிட்டார்.

பல்கலைக்கழகங்கள், அரசுக் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்திலும், இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டை சரியாக செயல்படுத்த வேண்டும் என்று, சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம். அந்த 31 சதவீத இடஒதுக்கீட்டில் என்ன தவறு செய்கின்றனர் என்றால், 31 சதவீதம் என்பது Open competition, அனைத்து சாதியினரும் அதில் இருக்கலாம். மாணவர்கள் பெற்றிருக்கின்ற மதிப்பெண் அடிப்படையில், ரேங்க் மதிப்பீடு செய்யப்பட்டு, இடங்கள் ஒதுக்கப்படும். அதை சிலர், Un reserved என்று, அதாவது, இட ஒதுக்கீடு பெற்றவர்கள் போக மற்ற சாதிகள் என்று குறிப்பிட்டு விடுகின்றனர். அதெல்லாம் கிடையவே கிடையாது.

31 சதவீதம் Open competition போக, 30 சதவீதம் BC, MBC 20 சதவீதம், SC 18 சதவீதம், ST 1 சதவீதம் இப்படி 69 சதவீதம், என்று இனி எந்த படிப்பாக இருந்தாலும் சரி, கலைக் கல்லூரிகளில் பிஏ, பிஎஸ்சி சேர்வதாக இருந்தாலும், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்தாலும், இந்த இட ஒதுக்கீட்டு முறையைத்தான் பின்பற்ற வேண்டும். இவையெல்லாம் ஏற்கெனவே இருக்கிறது.

இருந்தாலும், சில இடங்களில் நடைபெறுகின்ற தவறுகளை எல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான், இன்று உயர் கல்வித்துறை மூலமாக சுற்றறிக்கையும் அனுப்பப்படவிருக்கிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x