Published : 06 May 2016 07:52 AM
Last Updated : 06 May 2016 07:52 AM

எம்ஜிஆர் வாழ்க்கை சம்பவங்களை கூறி வாக்காளர்களை கவரும் பொன்னையன்

சைதை தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக அரசின் சாதனைகளுடன் எம்ஜிஆர் வாழ்க்கை சம்பவங்களை கூறி வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகியான சி.பொன்னையன் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக தினமும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் இருந்து பணியாற்றிய மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்துள்ளார். இதனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு, எம்ஜிஆரின் வாழ்க்கை சம்பவங்களையும் கூறி வருகிறார். இது சைதாப்பேட்டை வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

சைதாப்பேட்டை தொகுதியில் பொன்னையன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

சைதாப்பேட்டையில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அதிகம் என்பதால், எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது, இந்த தொகுதியில் பல்வேறு சிறப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வழியில்தான் முதல்வர் ஜெயலலிதா நல்ல சுகாதாரம், தரமான கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி உட்பட பல்வேறு நலத்திட்டங்களை கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அளித்து வருகிறார்.

பசியின் கொடுமை

ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டத்தை கொண்டு வரும்போது, ரூ.300 கோடி செலவாகும், அதற்கு போதுமான நிதி ஆதாரம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இருந்த மத்திய அரசு கைவிரித்து விட்டது. ஆனால், எம்ஜிஆர், ‘‘பசியின் கொடுமை எனக்கு தெரியும். எனவே, நான் பட்ட துயரத்தை இனி எந்த குழந்தையும் படக்கூடாது’’ எனக் கூறி அரசின் மற்ற துறைகளில் சிக்கனத்தை கடைபிடித்து, அதன்மூலம் கிடைத்த நிதி ஆதாரம் கொண்டு சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்பிறகு, இத்திட்டத்தை பெரிய அளவில் கொண்டு சேர்த்தது முதல்வர் ஜெயலலிதாவை சேரும். அதிமுக தொடர்ந்து நல்லாட்சி வழங்கிட எங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

காரை மறித்த பெண்கள்

பொன்னையன் பேசும்போது, ‘‘கடந்த 1977-ல் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் எம்ஜிஆருடன் காரில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 10 பேர் திடீரென காரை மறித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய எம்ஜிஆர், அவர்களிடம் விசாரித்தார். ‘எங்களுக்கு வேலை எதுவும் இல்லை, பணம் கொடுங்கள்’ என்று அந்த பெண்கள் கூறினர். எவ்வளவு வேண்டுமென எம்ஜிஆர் கேட்டார். அதற்கு ரூ.300 கொடுங்கள் என்றனர்.

‘‘அது போதுமா?’’ என்று கேட்டபடியே, எம்.ஜி.ஆர். தன்னிடம் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை தலா ரூ.4 ஆயிரம் என 10 பெண்களுக்கு பிரித்துக் கொடுத்தார். ‘‘நீங்கள் வெவ்வேறு இடங்களில் காய்கறி கடை, இட்லி கடை, பழக்கடை என வைத்து வியாபாரம் செய்யுங்கள். இனி யாரிடமும் பணம் கேட்கக் கூடாது’’ என அந்தப் பெண்களிடம் அறிவுரை கூறிய எம்ஜிஆரை பார்த்ததும் நான் வியந்துபோனேன்’’ என மக்களின் கரகோஷத்துக்கிடையே பொன்னையன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x