Published : 14 Jun 2022 06:18 AM
Last Updated : 14 Jun 2022 06:18 AM

நூறு நாள் வேலை திட்ட பணியின்போது ஒரு கண்ணில் பார்வையிழந்த மீனவப் பெண்: ராமநாதபுரம் குறைதீர் கூட்டத்தில் மனு

ராமேசுவரம்: நூறு நாள் வேலைத் திட்ட பணியின்போது, ஒரு கண்ணில் பார்வையிழந்த மீனவப் பெண் சிகிச்சைக்கு உதவக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தங்கச்சிமடம் ஊராட்சி குடியிருப்பைச் சேர்ந்த பாலகுமார் என்பவரின் மனைவி நாகவள்ளி(28). மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தங்கச்சிமடம் ஊராட்சியில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரிகிறார்.

இவர் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனு: நூறுநாள் வேலை திட்டத்தில் கருவேல மரங்களை அகற்றும்போது ஒரு கண்ணில் முள் குத்தியது. அதையடுத்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியதாகவும், அதனால் ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதால் பார்வையை மீண்டும் பெற முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உதவிபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 119 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வுகாண, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x