Published : 13 Jun 2022 06:50 AM
Last Updated : 13 Jun 2022 06:50 AM

திருப்பூர் | பல்லடம் புறவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா? - அரசு நிதி ஒதுக்கியும் தொடங்கப்படாத பணிகள்

திருப்பூர்: சுற்றுவட்டார பகுதிகளில் விபத்துகளை குறைக்க பல்லடம் புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் பிரதான போக்குவரத்து மையப்பகுதியாக பல்லடம் உள்ளது. கோவையில் இருந்து மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு முக்கிய போக்குவரத்து சாலையாக பல்லடம் உள்ளது. இச்சாலையில் நிகழ்ந்தவாகன விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக பல்லடத்தை சேர்ந்த சிலர் கூறும்போது, “பல்லடம் நகரில் பல்லடம்-கோவை சாலையில் காரணம்பேட்டை வரைஅடிக்கடி விபத்துகள் அரங்கேறுகின்றன. வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதி போதியஅளவில் இல்லை என்பதே விபத்துகளுக்கு காரணம்.

அதேபோல் நகரில் போக்கு வரத்து சிக்னல்கள் பராமரிப்பு மற்றும் விபத்து அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள் வைத்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இரவு நேரங்களில் வளைவான சாலைகளில் ஒளிரும் வில்லை ஒட்டுவது, மையத்தடுப்பு இல்லாத பகுதிகளில்மையத்தடுப்பு அமைப்பது உட்படபல்வேறு பணிகளை நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட போக்குவரத்து போலீஸார் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக வட்டாரப் போக்கு வரத்து அலுவலர்கள் கூறும்போது, “மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் மே 18-ம்தேதி வரை, 12,611 ஓட்டுநர் உரிமங்கள் விபத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில், 5-ல் ஒரு பகுதிவிபத்துகள் பல்லடம் பகுதிகளில் நிகழ்ந்துள்ளன. பல்லடம் வட்டத்தில் விபத்தால் 2,528 ஓட்டுநர் உரிமங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளன. விபத்துகளை தடுக்கும் வகையில் வாகன விதிமீறல்களையும் கண்காணித்து வருகிறோம்,” என்றனர்.

சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம்அளித்த மனுவில், "தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் வளம் உள்ள பகுதி பல்லடம். தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோரின் வாகனங்கள் மட்டும் பல்லாயிரக்கணக்கில் இருக்கும். இதனால், பல்லடம் நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும், விபத்துகளிலும் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால், பல்லடத்தில் சுற்று புறவழிச்சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

அதற்காக தமிழக அரசு ரூ.45 கோடி நிதி ஒதுக்கியது. கடந்த ஓராண்டாக எந்தவித பணிகளும் நடைபெறாததால், இத்திட்டம் நிறைவேறுமா? அல்லது கைவிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், புறவழிச்சாலை திட்டத்துக்கு அளவீட்டுக் கற்கள் இல்லாததால், தற்போது கிடப்பில் போட்டுள்ளதாக அறிகிறோம். அளவீட்டு கற்களை பல்லடம் மக்கள் வாங்கித் தர தயாராக உள்ளோம். புறவழிச்சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x