Last Updated : 10 May, 2016 06:04 PM

 

Published : 10 May 2016 06:04 PM
Last Updated : 10 May 2016 06:04 PM

நாங்குநேரியில் வசந்தகுமாருக்கு கைகொடுக்கும் ‘மிஸ்டர் கிளீன் இமேஜ்’

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் எச்.வசந்தகுமாருக்கு மிஸ்டர் கிளீன் இமேஜ் மிகப்பெரும் பலமாக இருக்கிறது. இத்தொகுதியில் 2006 முதல் 2011 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது ரூ. 1,000 கோடி அளவுக்கு திட்டப்பணிகளை நிறைவேற்றிய சாதனையை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி இது. நாடார், தேவர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அதிகம் வசிக்கிறார்கள். ஏர்வாடி, களக்காடு பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.

கடந்த14 சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, திமுக 2 முறை, அதிமுக 4 முறை, ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கின்றன. இம்முறை இத்தொகுதியில் 16 பேர் போட்டியிடுகிறார்கள்.

சாதனை மலர்

இத்தொகுதியில் வசந்தகுமார் செய்த பணிகளை விளக்கி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு சார்பில், வண்ண புகைப்படங்களுடன் தயாரித்த மலர் கிராமம்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கூடவே திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களும் விளக்கப்படுகிறது.

இதுபோக `மிஸ்டர் கிளீன் இமேஜ்’ வசந்தகுமாருக்கு மக்கள் மத்தியில் இருப்பது அவருக்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது. நாங்குநேரி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, அங்கு கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்தி, சித்த மருத்துவப் பிரிவையும் தொடங்கிய இவரது பணி குறித்து தொகுதி மக்கள் மத்தியில் பரவலான பாராட்டு இருக்கிறது.

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வசந்தகுமார் கூறியதாவது:

இத்தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருந்தபோது, நாங்குநேரி உயர்தொழில்நுட்ப பூங்காவை செயல்பட வைத்தேன். தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் காலங்களில் தண்ணீர் வீணாகி கடலில் கலப்பதை தடுத்து ரூ.369 கோடியில் வெள்ளநீர்கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தேன். பல கோடி ரூபாய் செலவில் பாலங்களை அமைத்தேன். மக்களின் தேவைகளுக்காக ரேஷன் கடைகளை திறந்து வைத்தேன். இப்படி பல்வேறு சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கிறோம். அவர்களும் அவற்றை மறக்கவில்லை.

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இன்னும் பல இடங்களுக்கு பேருந்து, சாலை, குடிநீர் வசதிகள் இல்லை என்பதை பிரச்சாரத்தின்போது மக்கள் நேரடியாக தெரிவிக்கிறார்கள். இதையெல்லாம் செய்துதருவதாக உறுதி அளித்துள்ளேன்.

தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் பாளையங்கோட்டை, வள்ளியூர், களக்காடு, மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் நிரந்தர அலுவலகங்களை செயல்படுத்த வுள்ளேன். மக்கள் எளிதாக என்னை அணுகமுடியும். அவர்களது குறைகளை மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள தலைவர்களிடம் உடனுக்குடன் எடுத்துரைத்து என்னால் தீர்வுகாண முடியும்.

தொகுதியிலுள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் நான் பொதுவானவனாக இருக்கிறேன். எனக்கு ஆதரவு கேட்டு பல்வேறு தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரத்துக்கு வரவுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x