Published : 12 Jun 2022 07:10 AM
Last Updated : 12 Jun 2022 07:10 AM

இந்தியாவில் ஆன்மிக வளர்ச்சியும் அவசியம் - ‘ஹரிவராசனம்’ நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு ஆளுநர் ரவி கருத்து

‘ஹரிவராசனம்’ பாடலின் நூற்றாண்டு விழாவுக்கான இலச்சினையை (உள்படம்) சென்னை வானகரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சுவாமி சிதானந்தபுரி, சுவாமி மித்ரானந்தா, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்தகோபன், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய பொதுச் செயலாளர் ஈரோடு ராஜன், தமிழக தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: வேற்றுமையில் ஒற்றுமை என நமது இந்திய அரசியலமைப்பு வலியுறுத்துவதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதார வளர்ச்சிபோல, ஆன்மிகத்தின் வளர்ச்சியும் அவசியம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை சாத்தும்போது பாடப்படும் பிரசித்தி பெற்ற ‘ஹரிவராசனம்’ பாடல் இயற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா குழு அறிவிப்பு கூட்டம் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா இலச்சினையை (லோகோ) வெளியிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

இந்திய அரசியலமைப்புதான் நமது ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமை என நம்மை பற்றி பெருமிதத்துடன் கூறுகிறோம். அதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. தர்மம் என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல. மதம் அனைவரையும் உள்ளடக்கியது. கி.மு. 2-ம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளும், தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை. அதுதான் பாரதத்தை உருவாக்கியது.

குஜராத் சோமநாதர் கோயில் சொத்துகளை அழித்து காந்தகார், பெஷாவர் போன்ற நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். ஆனால், அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டன. சனாதன தர்மத்தின் வலிமையை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

மற்ற நாடுகள்போல, ராணுவ வீரர்கள், அரசர்கள் மூலம் இந்தநாடு உருவாகவில்லை. ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதனதர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது இந்த நாடு. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரத்தின் வளர்ச்சிபோல, ஆன்மிகத்தின் வளர்ச்சியும் அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். ஆன்மிகத்தின் வளர்ச்சியே இந்த தேசத்தின் வளர்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, ‘‘ஐயப்பனின் புகழை உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐயப்பன் வாழ்வியல் முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஐயப்பனின் 18 படிகளை கடந்தால், படிப்படியாக முன்னேறலாம் என்பதே அவர் கூறுவது. ஆன்மிகத்தை பின்பற்றினால், உடல்நலமும், மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்றார்.

காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், உடுப்பிபெஜாவர் மடாதிபதி விஸ்வப்பிரசன்ன தீர்த்தர், மாதா அமிர்தானந்த மயி, கோழிக்கோடு அத்வைதாசிரம தலைவர் சிதானந்தபுரி, சென்னை சின்மயா மிஷன் தலைவர் மித்ரானந்தா உள்ளிட்ட புரவலர்களின் வழிகாட்டுதலுடன் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தலைவராக இளையராஜா

ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழுவின் தேசிய தலைவராக இசைஞானி இளையராஜா, செயல் தலைவராக முன்னாள் நீதிபதி ஜெய்சந்திரன், துணைத் தலைவர்களாக நீதியரசர்கள் குமார், வள்ளிநாயகம், பத்திரிகையாளர் குருமூர்த்தி, இயக்குநர் பி.வாசு, பாடகி சித்ரா, நடிகர்கள் ஜெயராம், அஜய் தேவ்கன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைகள் நிர்வாக இயக்குநர் ஜி.நாச்சியார், அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகம்மது உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் நூற்றாண்டு விழா குழு ஒருங்கிணைப்பாளர் ஈரோடு ராஜன் கூறியதாவது:

ஹரிவராசனம் நூற்றாண்டின் பிரம்மாண்ட தொடக்க விழா, ஐயப்பன் வளர்ந்த அரண்மனை அமைந்துள்ள பந்தளத்தில் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறும்.தொடர்ந்து 18 மாதங்கள் நூற்றாண்டு விழா நடைபெறும். நாடு முழுவதும் கலை நிகழ்ச்சிகள், ரதயாத்திரை உள்ளிட்டவை நடத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x