Last Updated : 11 Jun, 2022 02:05 PM

 

Published : 11 Jun 2022 02:05 PM
Last Updated : 11 Jun 2022 02:05 PM

திமுக Vs அதிமுக Vs பாஜக: கோவை மேம்பாலம் திறப்பு விழாவில் தொண்டர்கள் மாறி மாறி கோஷமிட்டதால் சலசலப்பு

கோவை: கோவை மேம்பாலம் திறப்பு விழாவின்போது திமுக, அதிமுக, பாஜக கட்சி உறுப்பினர்கள் மாறி மாறி கோஷமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றான கோவை - திருச்சி சாலையில், ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலம் ரூ.253 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத் துறையினரால் கட்டப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் இன்று (ஜூன் 11) திறக்கப்பட்டது.

சென்னையில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இம்மேம்பாலத்தை திறந்து வைத்தார். கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் சமீரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, மேம்பாலம் திறப்பு விழாவுக்கு கட்சி கொடியுடன் ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கம் எழுப்பியபடி பாஜகவினர் அங்கு வந்தனர். பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாலை ஓரங்களில் நடப்பட்டு இருந்த திமுக கொடி கம்பங்களை திமுகவினரும் கையில் எடுத்துக் கொண்டு ‘முதல்வர் ஸ்டாலின் வாழ்க’ என கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே, அங்கு வந்த அதிமுகவினரும் தங்களது கட்சிக் கொடியை பிடித்தாவறு ‘எஸ்.பி.வேலுமணி வாழ்க’ என்று கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூன்று கட்சியினரும் பங்கேற்ற நிலையில், கடும் பரபரப்புக்கு இடையே மேம்பாலம் திறக்கப்பட்டது.

மூன்று கட்சி தொண்டர்களும் ஒரே இடத்தில் திரண்டதால் போலீஸார் செய்வதறியாது திணறினர். பெரும் சிரமப்பட்டு மோதல் ஏற்படாத வகையில் மூன்று தரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x