Published : 11 May 2016 08:46 AM
Last Updated : 11 May 2016 08:46 AM

பெரியார் பல்கலை. தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து யுஜிசி உத்தரவு: நீதிமன்றம் மூலம் தீர்வு காண நடவடிக்கை

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து யுஜிசி உத்தரவிட்டுள்ளது. ‘இதுகுறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும்’ என பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

சேலம், கருப்பூரில் கடந்த 1997-ம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இங்கு 2001-ம் ஆண்டு 96 பாடப் பிரிவுகளுடன் தொலைதூரக் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, 156 பாடத் திட்டம் மற்றும் பல்கலைக் கழக தொழில் கூட்டுத் திட்டம் மூலம் 12 கல்வி நிலையங்களில் தொழில்சார் பாடப் பிரிவுகளும் உள்ளன.

தொடக்கத்தில் தமிழகத்தில் 210 மையங்களும், பிற மாநிலங்களில் 70 மையங்களும், வெளிநாடுகளில் 6 மையங்கள் மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது. தற்போது, 350 மையங்கள் மூலம் 55 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

யுஜிசி வகுத்துள்ள விதிமுறைப் படி பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களிலும், மாநிலங்களிலம் மையங்கள் தொடங்க முன்னுரிமை அளிக்கப் படுகிறது. பிறமாநிலங்கள், வெளி நாடுகளில் புதியதாக மையங்கள் தொடங்கக் கூடாது என யுஜிசி அறிவுறுத்தியது.

இந்நிலையில், பெரியார் பல் கலைக்கழகம் வெளி மாநிலங் களில் கூடுதலாக மையங்கள் தொடங்கியிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2014-15ம் ஆண்டு யுஜிசி மாணவர் சேர்க்கை அங்கீகாரம் வழங்க வில்லை. இந்நிலையில் நடப் பாண்டு (2016-17) மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக அறிந்த யுஜிசி, பெரியார் பல்லைக்கழக தொலைதூர கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீ காரம் ரத்து செய்துள்ளதால், மாணவர்களை சேர்க்க வேண்டாம் என கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் கூறியதாவது:

பிற மாநிலங்களில் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்ட மையம் தொடங்க கூடாது என யுஜிசி கடந்த ஆண்டு கடிதம் அனுப்பியிருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பிற மாநிலங்களில் தொலைதூரக் கல்வி திட்டம் மூலம் மாணவர்கள் சேர்ப்பது நடைமுறையில் உள்ளது.

இதுகுறித்து கடந்த 6 மாதத்துக்கு முன்பே நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ‘உள்ளது உள்ளபடியான’ முறையில் தொலைதூரக் கல்வி திட்டத்தை நடத்திக்கொள்ள உத்தரவு பெற்றுள்ளோம்.

இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீ காரம் ரத்து செய்துள்ளதாக யுஜிசி மீண்டும் அறிவித்துள்ளது. இதுவரை 21 ஆயிரம் மாணவர்களை சேர்த்துள்ளோம். இருப்பினும் கடந்த 3 நாட்களாக மாணவர் சேர்க்கை நிறுத்தியுள்ளோம்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடி, அதன் வழிகாட்டுதலின்படி, மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால், தொலை தூரக் கல்வி திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x