

சென்னை: சமூக வலைதளம், இ-மெயில் மூலமாக குறைகளுக்குத் தீர்வு காணும் முறையை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில், ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை, நிலவகை மாற்றம் உள்ளிட்ட கட்டடம் கட்டுவது தொடர்பான பல்வேறு சேவைகளை சிஎம்டிஏ வழங்கி வருகிறது.
இந்தச் சேவைகள் தொடர்பாக பொதுமக்களின் குறைகளுக்கு சமூக வலைதளம், இ-மெயில் மூலம் தீர்வு காண சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கட்டட விதிமீறல் தொடர்பாகவும், தங்களின் குறைகள் தொடர்பாகவும் பொதுமக்கள் இ-மெயில் அல்லது சமூக வலைதளம் மூலம் புகார்களை பதிவு செய்யலாம். சம்பந்தபட்ட நபரின் பெயர் மற்றும் முகவரி, கட்டடம் இருக்கும் தெரு, முகவரி, கட்டடத்தின் வகை ஆகிய தகவல்களுடன் சேர்த்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.