Last Updated : 10 Jun, 2022 05:05 PM

 

Published : 10 Jun 2022 05:05 PM
Last Updated : 10 Jun 2022 05:05 PM

புதுச்சேரி | மூடப்பட்ட பாப்ஸ்கோ கிடங்கில் 30 டன் ரேஷன் அரிசி மக்கி துர்நாற்றம்: அதிகாரிகள் மீது திமுக குற்றச்சாட்டு

பாப்ஸ்கோ கிடங்கில் அரிசியை பரிசோதித்துப் பார்க்கும் புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா.

புதுச்சேரி: நகராட்சிக்கு சொந்தமாக உள்ள இடத்திலுள்ள பாப்ஸ்கோ கிடங்கில் துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரையடுத்து திமுக எம்எல்ஏக்கள் திறந்து பார்த்தபோது பல டன் அரிசி மக்கி வீணானது தெரியவந்தது.

புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ அங்காடி உள்ளது. அதை குடோனாக பாப்ஸ்கோ செயல்படுத்துகிறார்கள். கீழ் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில், துர்நாற்றம் வீசத்தொடங்கியது. அதையடுத்து தொகுதி எம்எல்ஏ சம்பத்திடம் தெரிவித்தனர். அவரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவாவும் அங்கு வந்து, பாப்ஸ்கோ குடோனை திறந்து பார்த்தனர்.

இரண்டு அறைகளிலும் நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள் மக்கி புழு பூத்து துர்நாற்றம் வீசியது. அவை முற்றிலும் வீணாகி போயிருந்தது. மொத்தம் 30 டன் வரை அரிசி வீணாகியிருந்தது தெரிய வந்தது.

இதுபற்றி எதிர்க்கட்சித்தலைவர் சிவா கூறுகையில், "பாப்ஸ்கோ நிறுவனமானது அரசு துறைக்கு சொந்தமான வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகராட்சி இடங்களில் பொருட்களை போட்டு மூடி வாடகையும் தராமல் உள்ளனர். பாப்ஸ்கோ நிறுவனம் வாடகை தராமல் உள்ளதால் நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் தரமுடியாத நிலை உள்ளது. அரிசி மூட்டைகளை இங்கு ஏன் வைத்தார்கள் - விநியோகம் ஏன் செய்யவில்லை என்ற கேள்வி உள்ளது. அரிசிக்கு பணம் தந்தது பாப்ஸ்கோவா, குடிமைப் பொருள் வழங்கல்துறையா என தெரியவில்லை. நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வைத்துள்ளது ஏன் தெரியவில்லை. மக்களுக்கு தரவேண்டிய அரிசி கணக்கு காட்டாமல் வைத்துள்ளார்களா என்ற விவரங்கள் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.

மக்களுக்கு கிடைக்கவேண்டிய அரிசி முற்றிலும் வீணாகி போயுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x