

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி மக்கள் நலக்கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் எம்எல்ஏ மீண்டும் போட்டியிடிகிறார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
அவருக்கு ஆதரவாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலாம்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் டி.கே .ரெங்கராஜன் வாக்கு சேகரித்து பேசினார்.
''கடந்த 15 ஆண்டுகள் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்து இருந்தது. மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது தமிழகத்துக்கு என்ன செய்தது. அதிமுகவும் எம்ஜிஆர் காலத்தில் புகளூர் காகித தொழிற்சாலையை தவிர வேறு எந்த தொழிற்சாலையையும் கொண்டு வரவில்லை. இதனால் இளைஞர்களுக்கு பல லட்சம் பேருக்கு படிப்புக்கு ஏற்ற வேலையில்லை. எனவே மக்கள் நலக் கூட்டணி ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட குறைந்தபட்ச செயல்திட்டம் செயல்படுத்தபடும்.
வாங்கும் சக்தியை பெருக்காமல் இலவசம் கொடுத்து என்ன பலன்? கூட்டணி ஆட்சியில் தரமான ஒரே கல்வி, குடிமனைபட்டா உள்ளிட்டவை கண்டிப்பாக இலவசமாக வழங்கபடும். தாழ்த்தபட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்ட சகஜானந்தாவுக்கு மணி மண்டபம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சீர்கேட்டில் சிக்கிய போது அதனை மீட்டு அரசு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெள்ளபாதிப்பின் போது உள்ளிட்ட மக்களின் அடிப்படை பணிகளில் பாலகிருஷ்ணனின் பணிகள் பாராட்டத்தக்கவை. எனவே, கடந்த காலங்களில் அவர் விடுபட்ட பணிகள் செய்யவும், லஞ்சம், லாவண்யம் இல்லாமல் தொடர்ந்து செயல்படவும் அவருக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.