Published : 10 Jun 2022 01:31 AM
Last Updated : 10 Jun 2022 01:31 AM

ரேஷன் கடை பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவு: தமிழக அரசு

சென்னை: நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாய விலை கடை பணியாளர்கள், அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நியாய விலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் "தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது. எனினும், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நியாய விலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதன் மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, நியாய விலைக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x