Published : 09 Jun 2022 01:17 PM
Last Updated : 09 Jun 2022 01:17 PM

இஸ்லாமியர்களின் நலனுக்கு எனக்கூறி பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு வாபஸ்

சென்னை: இஸ்லாமியர்களின் நலனுக்கு எனக்கூறி பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜகுஃபர் சாதிக் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்காக உதவுவதற்காகவும், மேலும் பல்வேறு நலப்பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி பணம் வசூலிக்கப்பட்டது.மற்ற நாட்களிலும் பணம் வசூல் செய்யப்பட்டாலும், ரமலான் பண்டிகையின்போது அதிகளவில் நடைபெறுகிறது. அவ்வாறு வசூலிக்கப்படும் பணம் சட்ட விரோத காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் சிறார்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.இதனை தடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது ஆவடி காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டப்படும் நபர்களை எதிர்மனுதாரராக சேர்க்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை சேர்த்து புதிய மனுத்தாக்கல் செய்தவாகக் கூறி, வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கும்படி மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்பபெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x