

கோவையில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி நேற்று கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுகவின் தேர்தல் அறிக்கை யானது மக்களுக்கு பயனளிப்ப தாகவோ, வித்தியாசமானதாகவோ இல்லை. சில இலவசங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் அதில் இல்லை.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இலவசங்களை மட்டுமே நம்புகிறார். ஆனால் சென்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவசத் திட்டங்களைக்கூட அவர் முழுமையாக நிறைவேற்றவில்லை.
கருத்துக்கணிப்பு முடிவுகள் சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் அதில் தனக்கு நம்பிக்கை இல்லை என தெளிவாக கூறுபவர் திமுக தலைவர் கருணாநிதி. திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது என்றார்.