Last Updated : 08 Jun, 2022 11:51 PM

 

Published : 08 Jun 2022 11:51 PM
Last Updated : 08 Jun 2022 11:51 PM

'டிஜிபிக்கு தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்' - நாமக்கல்லில் அண்ணாமலை பேச்சு

நாமக்கல்: மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு வரும் கூட்டத்தைப் பார்த்து திமுகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

நாமக்கல்லில் மத்திய பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் என்.பி. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் வி. பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 45 நாட்களை கடந்த நடந்து வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இதைப்பார்த்து திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒருவார காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 517 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. அதில் 15 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.

இதைக்கேட்டால் மத்திய அரசு நிதி வழங்காமல் ஓர வஞ்சனை செய்கிறது என சொல்கின்றனர். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்தாண்டு நான்காண்டு வேகமாக முடிய வேண்டியது தான் என இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நம்பர் ஒன்னாக உள்ளார். மத்திய அரசு நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக அமைச்சர்கள் போகமாட்டார்கள்.

கூட்டம் முடிந்த பின் மத்திய அரசிடம் இருந்து வரும் குறிப்பை எப்படி மாநில அரசு திட்டமாக மாற்றலாம் என ஆலோசனை செய்வர். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் 13 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஒருவர் கூட பதில் கடிதம் எழுதவில்லை. தமிழகத்தில் உள்ள பாதி மருத்துவக் கல்லூரிகள் திமுக அமைச்சர்களின் மனைவி பெயரில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பழைய சேகர்பாபுவை பார்க்காதீர்கள் என கூறுகிறார். அதைப் பார்க்கத்தான் பாஜக உள்ளது.

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஜி ஸ்கொயர் தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார். அவருடைய அனுபவத்திற்கு இது அழகில்லை. அவரை ஜி ஸ்கொயர் முத்துசாமி என அழைக்கலாம். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜக நிர்வாகி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது இம்மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூலை முதல் வாரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் காவல்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவர். முதல் ஆளாக ஒரு காவல் நிலையத்தை நான் முற்றுகையிடுவேன். மாநில டிஜிபிக்கு தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்" என்று பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x