Published : 08 Jun 2022 01:10 PM
Last Updated : 08 Jun 2022 01:10 PM

உள்நோக்கத்துடன் தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பினால் வழக்கு: அண்ணாமலைக்கு அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை 

சென்னை: உள்நோக்கத்தோடு தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பினால் வழக்கு தொடரப்படும் என அண்ணாமலைக்கு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்

சென்னை எழும்பூர் சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் முத்துசாமி, "தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 30 நாட்கள் சோதனை முறையில் ஒற்றைச்சாரள முறையில் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் மே மாதம் முதல் ஒற்றைச்சாரள சோதனையில் குறைகள் நிவர்த்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்னும் 2 மாதத்தில் சிஎம்டிஏ சம்பத்தப்பட்ட சேவைகள் மற்றும் அனுமதிகள் அனைத்தும் ஆன்லைனில் ஒற்றைச்சாரள முறையில் வழங்கப்படும்.

மக்களின் கால விரையத்தை குறைக்க அனுமதிகள் வழங்குவதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 ஏக்கர் வரை லேஅவுட் ஒப்புதல்களை மாவட்ட அலுவலகளங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். 5 ஏக்கர் வரை நகராட்சி அலுவலகங்களில் ஒப்புதல் வழங்கப்படும். 40 ஆயிரம் சதுரடி வரையிலான கட்டுமான அனுமதிகள் மாவட்ட அலுவலகத்திலேயே வழங்கப்படும்.

துறைரீதியாக உள்ள காலிப்பணியிடங்கள் காரணமாக சேவைகள் வழங்க தாமதமாகிறது. காலிப்பணியிடங்கள் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணிகளை தாமதமானாலும் குறைகள் சொல்கின்றனர். விரைந்து முடித்தாலும் குறை கூறுகின்றனர். 37% காலிபணியிடங்கள் இருக்கும் போதும் பணிகள் துரிதமாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

அண்ணாமலை சிஎம்ஏடிவில் மூன்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார். அண்ணாமலை கூறுவது போல் யாருக்கும் உடனடியாக அனுமதி வழங்கவில்லை. அவர் சொன்னதில் 90 % தேதிகள் பொய்யானதாக உள்ளது. ஜி ஸ்கொயர் பெயரில் சில விண்ணப்பங்கள் வந்துள்ளன. சட்டப்படி அனைத்து அனுமதிகளும் தந்துள்ளோம் . எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை.
பாஜக தலைவர் அண்ணாமலை, சிஇஓ பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது போல குறை கூறுகிறார். ஆனால், இந்த பணியிடம் 1978ல் இருந்தே நடைமுறையில் உள்ளது. இதுவரை 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் இருந்துள்ளனர். இதேபோல் அண்ணாமலை புகார் எழுப்பியுள்ள கோவை விவகாரத்தில், சிவமாணிக்கம் என்பவர் 12.12.2019ல் விண்ணப்பித்துள்ளார். 21.08.2021ம் ஆண்டு அனுமதி கிடைத்துள்ளது. சிவமாணிக்கத்திடம் ஜி ஸ்கொயர் வாங்கியிருக்கலாம். ஆனால் இதற்கான அனுமதி கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அனைத்து நிறுவனங்களுக்கும் விதிகளின் படி அனுமதி வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில் மிக விரைவாக அனுமதி அளித்ததுபோல அண்ணாமலை கூறுகிறார். அனுமதி அளிக்கப்பட்ட போது அதிமுக ஆட்சியே இருந்தது என்பதை கவனிக்க வேண்டும். விதிமுறைகள் பின்பற்றி அனுமதி அளிக்க கால அவகாசம் தேவைப்படும். சிஎம்டிஏவில் அண்ணாமலையையே அமர வைத்தாலும் எட்டு நாளில் அனுமதி கிடைக்காது.

அண்ணாமலை ஏதாவது லேஅவுட் போட்டிருக்கிறாரா?. அண்ணாமலைக்கு ஏதேனும் அனுமதி தேவைப்படுமெனில் உரிய அவனங்களுடன் விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும் . ஜி ஸ்கொயர் தவிர மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. நீண்ட காலமாக அனுமதி கிடைக்காத நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க சிறப்பு முகாம் கூட நடத்த தயார்.

அண்ணாமலை சரியான ஆதரங்களோடு பேசினால் நல்லது. சரியான விவரங்களை திருத்திக்கொள்ள தயார். ஆனால், உள்நோக்கத்தோடு தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பினால் வழக்கு தொடரப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x