Published : 08 Jun 2022 06:55 AM
Last Updated : 08 Jun 2022 06:55 AM

2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல்: அங்கன்வாடி மையங்களிலேயே தொடர கல்வித் துறை முடிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019-ல் தொடங்கப்பட்டன. 3-4 வயது குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும், 4-5 வயது குழந்தைகள் யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்துவந்தனர். அந்த வகையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள்தற்போது மழலையர் வகுப்பில்படிக்கின்றனர்.

இந்நிலையில், நடப்பு கல்விஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜிவகுப்புகள் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சிப் பணிகள் துறையுடன் இணைந்து 3 ஆண்டு சோதனை முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. கரோனா பரவலுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால், ஆசிரியர்கள், கட்டிடங்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மழலையர் வகுப்புகளை அங்கன்வாடி மையங்களிலேயே தொடர முடிவானது. அதற்கேற்ப, மழலையர் வகுப்புக்கு தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2,381 ஆசிரியர்கள் மீண்டும் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எனவே, இனி மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை அங்கன்வாடி மையங்கள் மூலமாகவே நடத்தப்படும்’’ என்றனர்.

இதுகுறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: முதல் ஆண்டில் இத்திட்டத்துக்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், மழலையர் வகுப்புகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் பரி சீலனை செய்யப்பட்டது.

ஆனால், மழலையர் வகுப்புக்கு பணியிடம் மாற்றப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதன் கண்காணிப்பு பொறுப்பில் இருந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

மேலும், கரோனா பரவலுக்கு பிறகு, அரசுப் பள்ளி வளாகங்களில் மழலையர் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறையும் ஆர்வம்காட்டவில்லை. இதனால் மழலையர் வகுப்புகளை மூடிவிட்டு, அங்கன்வாடி மையங்களை முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜிபாடங்கள் கற்றுத் தரப்படாது. ஏற்கெனவே இருந்த அடிப்படைகல்வித் திட்டமே செயல்படுத்தப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளை பராமரித்து பாடங்களை எடுப்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நடவடிக்கை காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக சரியும் சூழல் உருவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x