Published : 06 May 2016 08:02 AM
Last Updated : 06 May 2016 08:02 AM
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக எங்கள் அணியை, மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக பல்வேறு புகார்கள் எழுகின்றன.
கடலூர் மாவட்டம் சாவடிக்குப்பம் பகுதியில் திருமாவளவன் சென்ற பிரச்சார வாகனம் நேற்று முன்தினம் இரவு தாக்கப்பட்டுள்ளது. ஜனநாயக பண்புகளை காலில் போட்டு மிதித்துவிட்டு, வன்முறை மூலம் வெற்றி பெற முயற்சி நடக்கிறது. பணம் கொடுப்பது, அவதூறு பிரச்சாரம், கருத்துக்கணிப்பு இவை அனைத்தும் ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். கருத்துக்கணிப்பு எங்களை முடக்கிவிடவில்லை. முன்பைவிட தீவிரமாக செயலாற்றி வருகிறோம். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பலம் வாய்ந்த அணியாக மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா அணி உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற ஸ்டாலின் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். ஸ்டாலின் மருமகன் சபரீசன் தான் அவரை இயக்குகிறார். அவர் செய்வதெல்லாம் செயற்கையாக இருக்கிறது. செயற்கைத்தனம் எப்போதும் வெற்றி பெறாது. அதிமுகவும், திமுகவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஊழலை அங்கீரித்ததாக அர்த்தம். தமிழகம் நாசமாகும். அதிமுக, திமுக மீது ஊழல் வழக்குகள் உள்ளன.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் எங்களைப் பற்றி பேசுவதில்லை. மக்கள் மத்தியில் மாற்று அணி என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதுதான் அவர்கள் பேசாமல் இருக்கக் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT