Published : 07 Jun 2022 06:01 PM
Last Updated : 07 Jun 2022 06:01 PM

முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை மதுரை எய்ம்ஸ் அமையும் இடத்தை பார்வையிட செல்லாதது ஏன்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்

மதுரை: மதுரைக்கு 10-க்கும் மேற்பட்ட முறை வந்தும், இதுவரை 'எய்ம்ஸ்' அமையும் இடத்தை ஒரு முறை கூட சென்று பார்வையிடாதது ஏன் என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேவேளையில், இதற்கான காரணத்தை சுகாதாரத் துறை அதிகாரிகள் விவரித்துள்ளன.

தமிழகத்தில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (All India Institute of Medical Sciences) ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் 750 படுக்கை வசதிகளுடன் அமைகிறது. தற்போது எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப்பணி இன்னும் தொடங்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.1264 கோடி என ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட நீண்ட காலதாமதத்தால் தற்போது இத்திட்டச் செலவு ரூ.1978 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான மொத்த திட்ட மதிப்பீட்டில் ரூ.1,978 கோடியில் ஜைக்கா நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. மீதி நிதியை வரும் அக்டோபர் 26ம் தேதிக்குள் வழங்கிவிடுவதாக கூறியிருக்கிறது. இதற்கிடையில் ஜைக்கா நிறுவனம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வரைப்படம் தயாரிப்பு, பொறியியல் முன் தயாரிப்பு முதற்கட்டப்பணிகளை தொடங்கியிருக்கிறது.

ஆனால், முதல்வராக பொறுப்பேற்று பலமுறை மதுரைக்கு வந்து இதுவரை ஒரு முறைகூட 'எய்ம்ஸ்' மருத்துவனை அமையும் தோப்பூருக்கு மு.க.ஸ்டாலின் வரவில்லை. அதனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லையோ என்ற எண்ணம் தென் மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் ஒரு காணொலி வெளியிட்டு அதில், ''முதல்வராக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் 10-க்கும் மேலான முறை மதுரை வந்தும் அவர் எய்ம்ஸ் அமையும் இடத்தை பார்வையிட செல்லவில்லை'' என்றும், ''நாளை சிவகங்கை செல்வதற்காக மதுரை வரும் அவர் அங்கு சென்று பார்வையிட செல்ல வேண்டும்'' என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது: ''எய்ம்ஸ் போன்ற நவீன மருத்துவ திட்டம் மதுரைக்கு வருவதால் தென் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைய வாய்ப்புள்ளது. வேலைவாய்ப்பு, தொழில் வர்த்தகம், மருத்துவ சுற்றுலா மேம்படும். பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதனால், இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை பொறுத்தவரையில் மத்திய அரசு மேற்பார்வையில்தான் திட்டப்பணிகள் நடக்கும். நடப்பு கல்வியாண்டில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு இடம் கேட்டனர். அதற்கு தமிழக அரசு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கி கொடுத்தது. தற்போது அங்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நடக்கிறது.

மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் சொல்கிற அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. தற்போது நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் கட்டுமானப் பணியே தொடங்காத நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றால் வெறும் காலி இடத்தைப்பார்த்து வரும் சூழல் ஏற்படும். அது மத்திய அரசுக்கு எதிராக எய்ம்ஸ் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்வதாக ஆகிவிடும். அதனால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எயம்ஸ் திட்டப்பணிகளை முடிக்கவே தமிழக அரசு கருதுகிறது. அதில் அரசியல் செய்ய விரும்பவில்லை.

ஜைக்கா நிறுவனத்தை பொறுத்தவரையில் பணிகளை தொடங்கினால் தொடர்ச்சியாக தோய்வின்றி பணிகள் நடந்து முடிக்கப்படும். அந்த அடிப்படையிலே 2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2026-ம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் தொடங்கியதும் உறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தோப்பூர் வருவார்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x