

சென்னை: “அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ''தமிழ்நாட்டில் 2,381 அங்கன்வாடிகளை அரசுப் பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வராமல் தனியார் பள்ளிகளுக்கு செல்ல அரசே வழிகாட்டுகிறது.
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்து நடத்துவது தான் அரசின் பணி. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதை விடுத்து மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு.
மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இட மாற்றம் செய்தபோதே அவை மூடப்படும் என்ற செய்தி பரவியது. ஆனால், அப்போது அந்த செய்தியை மறுத்த பள்ளிக் கல்வித்துறை, இப்போது மூட ஆணையிட்டது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.
மழலையர் வகுப்புகள் ஏழைக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம். அவற்றை மூடி அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பை பறிக்கக் கூடாது. மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும், அதற்காக பயிற்சி பெற்ற மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
இதனிடையே, விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்பவில்லை. அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். பெற்றோர்கள் தங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் சேர்ந்துக் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்.