Published : 07 Jun 2022 01:19 PM
Last Updated : 07 Jun 2022 01:19 PM

“அண்ணாமலை தவறான தகவல்களை வெளியிட்டு சுய விளம்பரம் தேடி வருகிறார்” - அமைச்சர் ஆவடி நாசர்

சென்னை: “தமிழக அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு என தவறான தகவல்களை வெளியிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுய விளம்பரம் தேடி வருகிறார்” என்று பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் சாடியுள்ளார்.

தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும், தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதற்கு சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்க சந்திப்பில் பதில் அளித்த பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர், "தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது வரை ஆவினில் ஹெல்த் மிக்ஸ் தயார் செய்யப்பட வில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை சுய விளம்பரம் தேடி வருகிறார். ரூ.77 கோடி இழப்பு என தவறான தகவல்களை தெரிவிக்கிறார்.

கடந்த சட்டபேரவை மானிய கோரிக்கையில் கூட குழந்தைகள் முதியவர்கள் பயன்பெறும் வண்ணம் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தோம். பொங்கல் பரிசாக இருக்கட்டும் , தீபாவளிக்கு வழங்கிய இனிப்புகள் ஆகட்டும் அனைத்திலுமே ஆவின் பொருட்களை மட்டுமே பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "32 வகையான ஊட்டச்சத்துகள் நிறைந்த ஹெல்த் மிக்ஸ் தயார் செய்து தர முடியுமா என ஆவின் நிர்வாத்திடம் தமிழக சுகாதாரத்துறை சார்பில் கேட்கப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் சார்பில் அதற்கான முயற்சி எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் டெண்டர் வாங்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x