Published : 24 May 2016 09:30 AM
Last Updated : 24 May 2016 09:30 AM
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரை விட 37 ஆயிரத்து 730 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று மாலை அயனாவரம் பஸ் நிலையத்திலிருந்து திறந்த ஜீ்ப்பில் வீதி, வீதியாக வந்து நன்றி தெரிவித்தார். பொன்னுவேல்புரம், மயிலப்ப தெரு, பங்காரு தெரு, பெரம்பூர் மேம்பாலம் வழியாக பாக்ஸன் தெரு, பேப்பர் மில்ஸ் சாலை, பந்தர் கார்டன் பிரதான சாலை வழியாக மாதவரம் நெடுஞ்சாலை மடுமா நகர், ஜமாலியா குடியிருப்பு, தீட்டி தோட்டம், திருவிக நகர் குடியிருப்பு, மீன் மார்க்கெட் வழியாக எஸ்.ஆர்.பி. கோயில் வடக்கு தெரு வரை சென்று ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் ஸ்டாலினுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். இன்றும், நாளையும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று கொளத்தூர் அண்ணா சாலையில் தொடங்கி அரிதாஸ் தெரு, பஜனை கோயில் தெரு, எஸ்.வி.எம். பாடசாலை தெரு, காமராஜ் தெரு, வசந்தம் நகர், பூம்புகார் நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT