'கடலூர் துயரம் இனியும் நிகழாமல் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது' - டிடிவி தினகரன்

'கடலூர் துயரம் இனியும் நிகழாமல் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது' - டிடிவி தினகரன்
Updated on
1 min read

சென்னை: "கடலூரில் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தது போன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடலூர் மாவட்டம் ஏ. குச்சிபாளையம், கீழ் அருங்குணம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்தேன். பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி, இத்தகைய துயர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக,கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகில் உள்ளது கீழ்அருங்குணம் கிராமம். இங்குள்ள கெடிலம் ஆற்றில் மழை காலத்தில் நீர் வரத்து இருப்பதும், அதன் பின் வறண்டு காணப்படுவதும் உண்டு. ஆனாலும் தடுப்பணை பகுதியில் தண்ணீர் தேங்கியிருக்கும். அண்மையில் பெய்த மழையால் ஆற்றின் தடுப்பணைக்கு அருகில் அதிகப்படியாக நீர் தேங்கியுள்ளது.

இதையறிந்த அப்பகுதியில் உள்ள ஏ.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துராம் மகள் சுமிதா(18), குணால் மனைவி பிரியா(19), அமர்நாத் மகள் மோனிகா(16), சங்கர் மகள் சங்கவி(18), முத்துராம் மகள் நவநீதம்(20), அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராஜகுரு மகள் பிரியதர்ஷினி(15) அவரது தங்கை திவ்யதர்ஷினி(10) ஆகியோர் நேற்று கீழ்அருங்குணம் கிராமப் பகுதி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

தடுப்பணையில் இருந்து, 300 மீட்டர் தொலைவில் ஆற்றில் தேங்கியிருந்த நீரில் இறங்கி குளித்தபோது, எதிர்பாரத விதமாக மோனிகா மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். உடன் குளித்த சக சிறுமிகள் இருவரையும் மீட்க ஆழமான பகுதிக்குச் சென்றபோது, அவர்களும் நீரில் மூழ்கி தத்தளித்தவாறே கூச்சலிட்டுள்ளனர்.தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அனைவரும் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பிரியா என்பவருக்கு திருமணமாகி ஓரிரு மாதங்களே ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in