Published : 06 Jun 2022 10:49 AM
Last Updated : 06 Jun 2022 10:49 AM

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் எப்போது வழங்கப்படும்: ஓபிஎஸ்

ஓபிஎஸ்

சென்னை: "கடந்த மே 31-ம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் எப்போது வழங்கப்படும்? என்பதற்கான ஓர் உத்தரவாதத்தினைக் கூட அரசு அறிவிக்காதது ஓய்வு பெற்றவர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.திமுக அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர்களும் பயனடையும் வகையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக அரசு, ஓராண்டாகியும் அது குறித்து வாய் திறக்கவில்லை. மாறாக, 31-05-2022 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு எவ்வித ஓய்வூதியப் பயன்களையும் அளிக்காமல் அவர்களை வெறும் கையுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ள அரசு திமுக அரசு. ஓய்வூதியப் பலன்கள் எப்போது வழங்கப்படும் என்பதற்கான ஓர் உத்தரவாதத்தினைக் கூட அரசு அறிவிக்காதது ஓய்வு பெற்றவர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 'விடியலை நோக்கி' என்று சொல்லி விரக்தியின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கின்ற அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை இதுபோன்ற நம்பிக்கைத் துரோகம் தான் 'திராவிட மாடல்' போலும். திமுக அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

31-05-2022 அன்று தமிழகம் முழுவதும் 1,072 பேர் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும், இவர்களில் மாநில விரைவு போக்குவரத்துக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற 49 பணியாளர்களுக்கு மட்டும் தலா இரண்டு லட்சம் ரூபாய் வருங்கால வைப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டதாகவும்,கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து ஒய்வு பெற்ற 72 பணியாளர்களுக்கு சேமநல நிதியிலிருந்து 15,000 ரூபாய் முதல் 22,000 ரூபாய் வரை வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள 951 பணியாளர்களுக்கு எவ்விதப் பணமும் வழங்கப்படவில்லை என்றும், முன்பிருந்ததைப் போல பின் தேதியிட்ட காசோலைகள் கூட வழங்கப்படவில்லை என்றும், இந்த ஓய்வூதியப் பலன்கள் எப்போது வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், அடுத்த மாதத்திலிருந்து சம்பளம் வராது என்ற சூழ்நிலையில், குடும்பத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற விரக்தியில் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளதாகவும், மன உளைச்சல் அவர்களை வாட்டி வதைப்பதாகவும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கும்பகோணம் பணிமனையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி, பலருக்கு உதவி புரிந்து, உதவி மேலாளராக 31-05-2022 அன்று ஓய்வு பெற்ற ரமேஷ் என்பவர் ஓய்வு பெற்ற நாளன்று வெறும் கையுடன் வீடு சென்ற நிலையில், 01-06-2022 அன்று மன உளைச்சல் காரணமாக மரணம் அடைந்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, கருணை அடிப்படையில் இவருடைய குடும்பத்திற்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை முதலில் வழங்குமாறு திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஓய்வூதியப் பலன்கள் மூலம் தன் மகன் அல்லது மகளுக்கு திருமணத்தை நடத்தலாம் என்றும், உயர் கல்வி படிக்க வைக்கலாம் என்றும், ஏற்கெனவே வாங்கிய வீட்டுக் கடனை அடைக்கலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்றவர்களை வெறும் கையுடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனுப்பி வைத்தது அவர்கள் மேல் இடி விழுந்தது போல் உள்ளது. அரசின் இந்தச் செயல் மூலம் மேலும் கடனாளிகளாக ஆகும் நிலைக்கு ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் ஆகும். இதன் காரணமாக ஓய்வு பெற்ற அனைவருமே மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், இனி வரும் மாதங்களில் ஓய்வு பெற இருப்பவர்களும் தங்களுடைய ஓய்வூதியப் பலன்கள் எப்போது கிடைக்குமோ என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்", என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x