Published : 05 Jun 2022 02:29 PM
Last Updated : 05 Jun 2022 02:29 PM

மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 55 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்பு

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை 55 கி.மீ தூரத்திற்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்தப் பேரணி, சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’இயக்கத்திற்கு ஆதரவாக, பாப் (BOB) அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இதில் சவேரா ஹோட்டலின் இணை நிர்வாக இயக்குநர் நினா ரெட்டி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து காலை 5 மணிக்கு தொடங்கிய பேரணி செங்கல்பட்டில் உள்ள கொண்டங்கி கிராமத்தில் நிறைவு பெற்றது.

இது தொடர்பாக, அதில் பங்கேற்ற தன்னார்வலர்கள் கூறுகையில், “உலகளவில் மண்ணின் வளம் மிக வேகமாக அழிந்து வருகிறது. தற்போது இருக்கும் மண் வளத்தை கொண்டு அடுத்த 45 முதல் 60 ஆண்டுகள் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என ஐ.நா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 2045-ம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியை தாண்டிவிடும்; ஆனால், உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துவிடும் என ஐ.நாவின் ஆய்வு கூறுகிறது. இதனால், உலகில் உணவு பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் அதிகளவில் இடம்பெயருவார்கள், உள்நாட்டு போர்கள் மூளும் வாய்ப்பும் உள்ளது. மண் வளம் இழப்பதால் நாம் உண்ணும் உணவின் சத்தும் குறைந்து வருகிறது.

எனவே, மண் வளம் இழப்பதை தடுக்கவும், இழந்த வளத்தை மீட்டெடுக்கவும் அரசாங்கங்கள் சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி ‘மண் காப்போம்’என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இதற்காக அவர் லண்டன் முதல் தமிழ்நாடு வரை 100 நாட்களில் 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவ்வியக்கத்திற்கு இதுவரை 74 நாடுகளும், ஐ.நாவின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன” என தெரிவித்தனர்.

10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்

இதுதவிர சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 3, 4 மற்றும் 5 ஆகிய 3 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஏக்கரில் 4,000 மரக்கன்றுகளையும், திருவள்ளூரில் 13 ஏக்கரில் 4,800 மரக்கன்றுகளையும், செங்கல்பட்டில் 7 ஏக்கரில் 1,450 மரக்கன்றுகளையும் விவசாயிகள் நடவு செய்தனர்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக, தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி, வேங்கை, மலை வேம்பு போன்ற பண மதிப்புமிக்க மரங்கள் நடப்படுகின்றன. காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாய நிலங்களின் மண் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மர வகைகளை பரிந்துரை செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x