‘இந்து தமிழ் திசை’ நடத்தும் உங்கள் குரல் - தெரு விழா: பூவிருந்தவல்லியில் நாளை நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நடத்தும் உங்கள் குரல் - தெரு விழா: பூவிருந்தவல்லியில் நாளை நடைபெறுகிறது
Updated on
1 min read

பூவிருந்தவல்லி: ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில் 'உங்கள் குரல் - தெரு விழா' நிகழ்ச்சி, பூவிருந்தவல்லி நகராட்சியில் நாளை (ஜூன் 5) நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக, அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக 'இந்து தமிழ் திசை' நாளிதழ் வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்சினைகள் தொடர்பாக தொலைபேசி மூலம் தெரிவிப்பதற்காக 'உங்கள் குரல்' என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு திருவள்ளூர் மாவட்டம் - பூவிருந்தவல்லி நகராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 'உங்கள் குரல்' வசதி மூலம் தெரிவித்த பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர் பொதுமக்களுடன் நாளை கலந்துரையாடுகிறார்.

இதற்கான நிகழ்ச்சி, பூந்தமல்லி- குமணன்சாவடியில், குன்றத்தூர் சாலையில் உள்ள எஸ்.எஸ்.மஹாலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பூவிருந்தவல்லி நகராட்சி பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை தேவைகள் குறித்தும் அங்கிருக்கும் பல்வேறு பொது பிரச்சினைகள் குறித்தும் உடனுக்குடன் தீர்வுகாணும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், நகராட்சி துணைத் தலைவர் தரன், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், நகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in