Published : 04 Jun 2022 07:06 AM
Last Updated : 04 Jun 2022 07:06 AM

உயர் நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் சுந்தர்மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாகப் பணியாற்றிய என்.மாலா, சுந்தர்மோகன், கே.குமரேஷ்பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான்சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு கடந்த பிப்ரவரி மாதம் பரிந்துரை செய்திருந்தது.

முதல்கட்டமாக என்.மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோர் ஏற்கெனவே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வரும் சுந்தர்மோகன் மற்றும் கே.குமரேஷ்பாபு ஆகியோரை தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களுக்கு விரைவில் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். இதன் மூலம் சென்னைஉயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது. மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 75 என்ற நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 17-ஆக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x