Published : 03 Jun 2022 11:41 AM
Last Updated : 03 Jun 2022 11:41 AM

கருணாநிதி பிறந்தநாள் | வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு முதல்வர் நேரில் விருது வழங்கி கவுரவிப்பு

கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருதினை வசனகர்த்தா ஆரூர் தாஸூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதினையும், புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸூக்கு கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருதினையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 3) வழங்கினார்.

2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்விருது ஒவ்வோர் ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று, இந்த ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சண்முகநாதனுக்கு வழங்கினார். விருதுடன், 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் முதல்வர் வழங்கினார்.

இதேபோல், கலைத் துறை வித்தகர் விருதுக்கான விருதாளரை தேர்வு செய்ய இயக்குநர் எஸ்பி.முத்துராமன் தலைமையில் நடிகர் சங்கதலைவர் நாசர், இயக்குநர் கரு.பழனியப்பன் கொண்ட குழு அமைக்கப்பட்டு, 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்காக, புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (90) தேர்வு செய்யப்பட்டார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று (ஜூன் 3) ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது, பரிசுத்தொகை ரூ.10 லட்சத்தை முதல்வர் ஸ்டாலின், தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று வழங்கினார்.

பத்திரிகையாளர் சண்முகநாதன்: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் 1953-ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்துவருகிறார்.

ஆரூர்தாஸ்: திருவாரூரில் பிறந்த ஆரூர்தாஸ், முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த ஆயிரம் திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x