Published : 03 Jun 2022 05:14 AM
Last Updated : 03 Jun 2022 05:14 AM

மக்களுக்கு பயன் அளிக்கும் புதிய யுக்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: புதிய யுக்திகள் மக்களுக்கு பயன் அளிக்கும் என்றால் அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுத் துறைகளின் செயலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நிறைவேற்றப்படும் அரசு திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலை உள்ளிட்டவை தொடர்பாக துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ஆய்வு நடத்தினார். நேற்று நடந்த 2-ம் நாள் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

இந்த அரசு பொறுப்பேற்றபோது கரோனா தொற்று, வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் மோசமான நிதி நிலைமை என ஒரே நேரத்தில் பல சவால்களை எதிர்கொண்டு அதில் ஓரளவு குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றோம். மக்கள் நலன் கருதியும், மாநிலத்தை புதிய வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், பல்வேறு அறிவிப்புகளை கடந்த ஆண்டில் வெளியிட்டுள்ளோம். அந்த அறிவிப்புகளில் சிறப்பான வகையில் சில திட்டங்கள் செயலாக்கத்துக்கு வந்துள்ளன. அதற்காக உங்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

சில துறைகளில் இன்னும் அரசாணைகள் வெளியிடுவதில் தாமதம் காணப்படுகிறது. அதற்கான காரணங்களை தெரிவித்துள்ளீர்கள். அவற்றைக் களைந்து விரைவான, தேவையான அனைத்து ஆணைகளையும் நீங்கள் வெளியிட வேண்டும். அதில் அனைவரும் நேரடி கவனத்தை செலுத்த வேண்டும். ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளின் பலன், கடைகோடி மக்களுக்கும் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து அவற்றுக்கு செயலாக்க வடிவம் தரவேண்டும்.

தொழில்துறை மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முன்னெடுத்துள்ளோம். அதை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவந்து, படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். என் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை விரிவுபடுத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

புதிய தொழில்கள் தொடங்குவதை ஊக்குவிக்க வேண்டும். அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அவற்றை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, நில எடுப்பு மற்றும் அனுமதி வழங்கல் போன்றவற்றை துரிதப்படுத்த வேண்டும். இதற்கு தொடர்புடைய பிற துறைகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சுகாதாரத் துறை மூலம் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது துறையின் அடிப்படையான மருத்துவ சேவைகளை மேம்படுத்தி வழங்க, ஐஎம்ஆர், எம்எம்ஆர் போன்ற குறியீடுகளை அனைத்து மாவட்டங்களிலும் கண்காணித்து, மருத்துவமனை நிர்வாகத்தை மக்கள் விரும்பும் வகையில் மேம்படுத்த வேண்டும். மக்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.

அதேபோல், கிராமப்புற மக்களை மையமாகக் கொண்டு செயல்படும் ஊரக வளர்ச்சித் துறையானது குடிநீர் வசதி, ஊரக வீட்டு வசதி, ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றிலும் சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதி மேம்பாட்டு திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

வேளாண்துறையை பொறுத்தவரை, உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய வேளாண் சந்தைப்படுத்தல் துறையை பலப்படுத்தவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்களை பெருமளவில் அமைக்கவும் வேண்டும். இதன்மூலம் மட்டுமே, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

ஒவ்வொரு துறையும், தனக்கான பயனாளிகள் யார் என்பதை தெளிவாக உணர்ந்து அவர்களுக்கு திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். தமிழக மக்கள் இந்த அரசுமீது வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு துறையும் செயலாற்ற வேண்டும்.

புதிய யுக்திகளை அவை எங்கிருந்தாலும் மக்களுக்கு பயனளிக்கும் என்றால் அவற்றை நம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் உங்களை ஊக்குவிக்க அரசு தயாராக உள்ளது. துறைத் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அமைச்சருடன் இணைந்து செம்மையாக செயல்பட வேண்டும். வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்துக்குள், குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டுக்குள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x