Published : 02 Jun 2022 08:00 PM
Last Updated : 02 Jun 2022 08:00 PM

மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது: முதல்வர் நாளை வழங்குகிறார் 

முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதை நாளை முதல்வர் வழங்குகிறார்.

2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்விருது ஒவ்வோர் ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை வழங்கவுள்ளார்.

இது தொடர்பாக தமிழிக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் 1953-ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்துவருகிறார்.

பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூக நீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார் சண்முகநாதன்.

அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, தினத்தந்தி குழுமத்தினால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப் பார்க்க உதவுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x