Published : 15 May 2016 09:01 AM
Last Updated : 15 May 2016 09:01 AM

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

66,007 வாக்குச்சாவடிகளிலும் முழுவீச்சில் ஏற்பாடு

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 234 தொகுதிகளுக்கு உட்பட்ட 66,007 வாக்குச்சாவடிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்க உள்ளது. இதில் 3,454 ஆண்கள், 320 பெண்கள், மூன்றாம் பாலினத் தவர் 2 பேர் என மொத்தம் 3,776 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கொளுத்தும் வெயிலுக்கு இடை யிலும் தமிழகம் முழுவதும் அனல் பறக்க நடந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில், நாளை நடக்க வுள்ள வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு கள் தீவிரமடைந்துள்ளன. வாக்குச் சாவடி அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு இன்று மாலைக்குள் சென்று விடுவார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட வாக்குப்பதிவுக்கு தேவை யான அனைத்து பொருட்களும் இன்று காலைமுதல் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன.

தீவிர கண்காணிப்பு

மொத்தம் உள்ள 66,007 வாக்குச் சாவடிகளிலும் காவல் துறை, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இன்று முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். 300 கம்பெனிகளை சேர்ந்த 30,000 துணை ராணுவப் படை வீரர்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீரர்களின் கொடி அணிவகுப்பு கடந்த 2 நாட் களாக தமிழகம் முழுவதும் நடந்தது. எல்லா தொகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர். வாக்காளர் களுக்கு பணப் பட்டுவாடா செய்வ தைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை யினரும், தேர்தல் பார்வையாளர் களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்பாடுகள் தீவிரம்

வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், நாளை (மே 16) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடக்கும். வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் பொது வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக் களிக்கலாம். வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வரிசையில் காத்திருக் கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அனைவரும் வாக் களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்குப்பதிவு நாளன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட் களை பாதுகாப்புடன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. பதற்ற மான வாக்குச்சாவடிகளில் கூடுத லாக துணை ராணுவப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

1.12 லட்சம் போலீஸார்

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரிவு டிஜிபி கே.பி.மகேந்திரன் தலைமையில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு மேற்பார்வையில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 958 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர் களுடன் 30,000 துணை ராணுவப் படை வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் போலீ ஸார், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

அவசர சூழ்நிலையை உடனுக் குடன் எதிர்கொள்ள ஏதுவாக மாநிலம் முழுவதும் 1,153 விரைவு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பணியில் 7,094 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. 24 மணிநேரமும் வாகன சோதனை நடக்கிறது. பணம் பறிமுதல் தொடர்பாக இதுவரை 612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 380 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக 160 வழக்குகள், நடத்தை விதிமீறல் தொடர்பாக 4,042 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக 1,254 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சைலேந்திரபாபு தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x