Last Updated : 01 Jun, 2022 06:18 PM

 

Published : 01 Jun 2022 06:18 PM
Last Updated : 01 Jun 2022 06:18 PM

திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பாட்டி, 3 பேரக்குழந்தைகள் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

பிரதிநித்துவப் படம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய பாட்டி மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா (60). இவரது மகன் சுவாமிநாதன். இவருக்கு வினோதினி (14). ஷாலினி (10) என்ற இரண்டு மகள்களும், கிருஷ்ணன் (8) என்ற ஒரு மகன் இருந்தனர். இவர்கள் மூவரும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.

விடுமுறை காரணமாக சிறுவர்கள் 3 பேரும் தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர். இதனிடையே, அதே பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் துணி துவைக்க பாட்டி புஷ்பா தனது பேரக்குழந்தைகளுடன் சென்றதாக கூறப்படுகிறது. 4 பேரும் குட்டையில் இறங்கிய நிலையில், எதிர்பாராத விதமாக அனைவரும் ஆழமான பகுதிக்குச் சென்று மூழ்கியதாக கூறப்படுகிறது.

குட்டையில் மூழ்கியவர்களின் கூக்குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்க முயன்றனர்.‌ மேலும், இது குறித்து திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

ஊர் மக்கள் குட்டையில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரத்துக்கு பிறகு குட்டையில் மூழ்கிய பாட்டி புஷ்பா, பேரக் குழந்தைகள் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணா ஆகியோரின் உடல்களை கிராம மக்கள் மீட்டனர்.

விபத்து குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த பிரம்மதேசம் போலீஸார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x