“ஒருமித்த கருத்துள்ள கட்சிகளை அணுகுவோம்” - தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த அன்புமணி

“ஒருமித்த கருத்துள்ள கட்சிகளை அணுகுவோம்” - தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த அன்புமணி
Updated on
2 min read

சென்னை: பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்துவந்த அன்புமணி ராமதாஸ் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றக் கொண்ட அன்புமணி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் இன்று விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரை சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர்மீது எப்போதும் எனக்கு தனிப்பட்ட மரியாதை இருக்கிறது.

அவரது மகன் விஜய பிரபாகரன் மூலம், பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்தார். 2026-இல் தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும். அதில் எங்கள் கட்சியின் இலக்கு பாமக ஆட்சிக்கு வரவேண்டும். அது தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது; கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியாகத்தான் இருக்கும். பாமகவைப் போல ஒருமித்த கருத்துள்ள கட்சிகளை நாங்கள் அணுகுவோம்" என்று அவர் கூறினார்.

இதனிடையே, “தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த்தையும், கட்சியின் பொருளாளர் பிரேமலதாவையும் சாலிகிராமத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் இன்று புதிதாக நியமிக்கப்பட்ட பாமக கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்று சென்றார்” என்று தேமுதிகவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாமக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்புமணி ராமதாஸ், முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், இபிஎஸ், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in