Last Updated : 14 May, 2016 11:33 AM

 

Published : 14 May 2016 11:33 AM
Last Updated : 14 May 2016 11:33 AM

ராயபுரத்துக்கு தேவை துணிச்சலான எம்எல்ஏ: பாஜக வேட்பாளர் டாக்டர். ஜமீலா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் முதல் முறையாக தேர்தல் களம் காணும் ராயபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர்.ஜமீலா தனது பிரச்சார அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் .

டாக்டர்.ஜமீலா 'தி இந்து' தமிழ் ஆன்லைனுக்கு அளித்த பேட்டியில் "ராயபுரத்துக்கு தேவை மக்கள் அனைவருக்கும் நல்லது செய்யும் துணிச்சலான சட்டமன்ற உறுப்பினரே, அத்தகைய ஒருவராக மக்கள் மத்தியில் தான் உருவாவது உறுதி" எனக் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியின் முழுவிவரம்:

பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.. ராயபுரம் மக்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது?

பிரச்சாரம் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்தத் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் குறைந்தது 5 முறையாவது சென்றிருக்கிறேன். முதல் இரண்டு மூன்று முறை மக்கள் மத்தியில் எனக்கு அவ்வளவோ வரவேற்பில்லை. ஆனால், இப்போது மக்களுக்கு நான் நன்றாகவே அறிமுகமாகிவிட்டேன். பெரும்பாலான மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். குறிப்பாக பெண்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர்.

ராயபுரம் தொகுதியின் பிரதான பிரச்சினை குடிநீர் தட்டுப்பாடு. இதனைப் போக்க ஆளும் கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீர் இல்லாமல் பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதேபோல் சென்னை பெருமழை வெள்ளத்தில் தத்ததளித்தபோதுகூட இத்தொகுதிப் பக்கம் எம்.எல்.ஏ. எட்டிப் பார்க்கவில்லை என்பது இப்பகுதி மக்களின் ஆதங்கம்.

எனவே ராயபுரத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். இந்த நிலை ராயபுரத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான். இந்த தேர்தலில் தாமரைச் சின்னத்துக்கு ஆதரவு அமோகமாக இருக்கும்.

இந்தத் தொகுதிக்கான உங்கள் திட்டம் என்ன?

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நிரந்தர தீர்வு காணப்படும். இங்கு மீனவர்கள் அதிகம் வசிக்கின்றனர். மீன்பிடி துறைமுகம் சீரமைக்கப்படும். குளிர்சாதன வசதி கொண்ட மீன் சந்தை உருவாக்கப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும். ஏழை மீனவர்களுக்கு விசைப்படகுகள் இலவசமாக வழங்கப்படும்.

இதுதவிர மகளிர் உதவி மையம், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் போன்றவை செயல்படுத்தப்படும். இப்பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி நிறுவப்படும். இந்தப் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் அலசி ஆராய்ந்து மக்கள் நலனை உறுதி செய்யும் வகையில் பிரத்யேக அறிக்கையை தயார் செய்துள்ளோம்.

கருத்துக் கணிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?

அது வெறும் கருத்து திணிப்பு. இந்த கருத்துக் கணிப்புகள் எல்லாம் மே 19-ம் தேதி தவிடுபொடியாகிவிடும். யாரும் எதிர்பாராத அளவுக்கு தேர்தல் முடிவுகளில் பாஜக கணிசமான வாக்குகளைப் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x