Published : 30 May 2016 11:56 AM
Last Updated : 30 May 2016 11:56 AM

காங். சட்டப்பேரவை கட்சித் தலைவராக கே.ஆர்.ராமசாமி தேர்வு

தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திங்கட்கிழமை வெளியிட்டார்.

கே.ஆர்.ராமசாமி 6-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் சட்டப்பேரவையில் 25 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர் என்பது கவனிக்கத்தக்கது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கொறடாவாக விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் திமுகவுடன் இணைந்து ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவோம். தேர்தல் தோல்விக்கு ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவது சரியல்ல. தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் எதிர்க்கிறது" என்றார் இளங்கோவன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. காரைக்குடி தொகுதியில் கே.ஆர். ராமசாமி, விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி, நாங்குநேரியில் ஹெச்.வசந்தகுமார், தாராபுரத்தில் வி.எஸ்.காளிமுத்து, உதகையில் கணேஷ், கிள்ளியூரில் ராஜேஷ், குளச்சலில் பிரின்ஸ், முதுகுளத் தூரில் பாண்டி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கே.ஆர்.ராமசாமியை சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக்க காங்கிரஸ் தலைமை விரும்பியது. ஆனால், நாங்குநேரி எம்எல்ஏ ஹெச்.வசந்தகுமார் மற்றும் விளவங்கோடு எம்எல்ஏ. விஜயதரணியும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக விரும்புவதால் இழுபறி நிலை நீடிப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமியை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x