ஏப். 1-ம் தேதியிலிருந்து அமல்; சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை உயர்த்த அனுமதி: நாளை முதல் கட்டிட உரிமையாளர்களுக்கு வரி விவரம் தெரிவிக்க நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள். படம்: ம.பிரபு
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள். படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு அறிவித்தபடி சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை உயர்த்த மாமன்ற கூட்டத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலாகும் இந்த சொத்துவரி விவரங்கள் குறித்து நாளை முதல் கட்டிட உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில், ஆணையர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்வுக்கு மன்றத் தீர்மானம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துவரி உயர்வு கடந்த ஏப். 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. சொத்துவரி எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சொத்து உரிமையாளர்களுக்கு நாளை (ஜூன் 1) முதல் தெரிவிக்க இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால்கள் அறிவியல் முறையில் அமைக்கப்படவில்லை என்றும், அவசரகதியில் அமைக்கப்படுகிறது என்றும், இத்திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம், மின் வாரியம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், அம்மா உணவகத்தில் கழிப்பறை அமைக்க வேண்டும், புளியந்தோப்பு இறைச்சிக் கூடத்தை மேம்படுத்த வேண்டும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 132 அரசுப் பள்ளிகளை மாநகராட்சி பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “மழைநீர் வடிகால் அமைக்கும்போது, கவுன்சிலர்களின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும். அரசுப் பள்ளிகளை மாநகராட்சி பராமரிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

மன்ற கூட்டத்தில் பேசிய மாதவரம் தொகுதி திமுக எம்எல்ஏ சுதர்சனம், “தொகுதியில் வளர்ச்சிக்கேற்ற திட்டங்கள் இல்லை. அங்குள்ள குளங்களை சீரமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலைப் போக்க மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்” என்றார்.

நேற்றைய மாமன்ற கூட்டத்தில், ரூ.42 கோடியில் 46 புதிய பூங்காக்கள் அமைப்பது, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவியர் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தில் ரூ.46 கோடியில் சிசிடிவி கேமரா நிறுவுவது, நிர்பயா திட்டத்தில், பெண்கள் வசதிக்காக 15 நடமாடும் கழிப்பறைகள் கொள்முதல் செய்வது, 1,000 இடங்களில் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைப்பது, சென்னைக்கான சாலையோர வியாபார திட்டத்தை உருவாக்க ஆலோசகரை நியமிக்க அனுமதி கோருவது என்பன உள்ளிட்ட 101 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in