Published : 31 May 2022 06:12 AM
Last Updated : 31 May 2022 06:12 AM

புதுச்சேரியில் புதிதாக மதுபானத் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி: ஆண்டு வருவாய் ரூ.100 கோடி உள்ளோர் விண்ணப்பிக்க கலால்துறை அழைப்பு

புதுச்சேரி: நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் புதிதாக மதுபான தொழிற்சாலைகளுக்கு கலால்துறை அனுமதி தரவுள்ளது. ஆண்டு வருவாய் ரூ. 100 கோடி உள்ளோர் விண்ணப்பிக்கலாம். மதுபான தொழிலில் 5 ஆண்டு அனுமதி பெற்றுள்ளதுடன் மூன்று ஆண்டுகளில் 3 லட்சம் பெட்டிகள் மதுபானம் தயாரித்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவையில் ஏற்கனவே 5 மதுபான தொழிற்சாலைகள், ஒரு பீர் தொழிற்சாலை இயங்கி வருகின்றன. மத்திய அரசிடம் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய ரூ. 2,000 கோடி முதல்வர் ரங்கசாமி கோரியிருந்தும் இதுவரை கிடைக்கவில்லை. நிதி நிலைமை திருப்திகரமாக இல்லாத சூழலும் உள்ளது. இந்நிலையில் புதுவை மாநில வருவாயை பெருக்க அரசு முடிவு செய்து மேலும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக கலால்துறை நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம் என கலால்துறை இணை ஆணையர் சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை கலால் விதிகள் சட்டம் 1970-ன்படி விண்ணப்பிக்க வேண்டும். மதுபான தொழிற்சாலை முதலீடு, சராசரி உற்பத்தி, தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். ஆலை வளாக அமைப்பு, தண்ணீர் தேவைகள், சுத்திகரிப்பு முறை ஆகியவற்றை முழுமையாக குறிப்பிட வேண்டும். எந்த இடத்தில் ஆலை அமைக்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட வேண்டும்.

குறைந்தபட்ச தகுதிகள்

எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை, மாநில அரசுகளின் கருப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த 3 ஆண்டு வருமான வரி தாக்கலை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருவாய் ரூ.100 கோடியாகவும், அதில் விண்ணப்பதாரரின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.50 கோடியாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர், இந்தியாவில் மதுபான உற்பத்தி தொழிலில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கண்டிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3 லட்சம்பெட்டிகள் மதுபானம் தயாரித்தவராக இருத்தல் வேண்டும்.

இதுதவிர கலால் ஆணையர் நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.கலால்துறைக்கு விண்ணப்பங்களை நிராகரிக்க உரிமையுண்டு. இந்த நிபந்தனைகளை ஏற்று மதுபான ஆலை நடத்த முன்வருவோருக்கு முதல்கட்ட அனுமதி வழங்கப்படும். ஓராண்டுக்குள் பிற துறைகளின் அனுமதி பெற்று ஆலையை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் கலால்துறையின் அனுமதி ரத்தாகும் வாய்ப்புள்ளது. " என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஆர்வலர்கள் கருத்து

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "புதுச்சேரியில் தற்போது அதிகளவு மது ஆலைகள் உள்ளன. புதிய மதுபானதொழிற்சாலைகள் வந்தால் அதிகளவு நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஐடி பார்க் உள்ளிட்ட இளையோருக்கு வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் தொழிற்சாலைகள் வரும் என்று எதிர்பார்த்த சூழலில் மதுபான தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது" என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x