புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கடத்தப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கடலூர் மாநகராட்சி அதிகாரிகளால் மினிலாரியில் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்.
கடலூர் மாநகராட்சி அதிகாரிகளால் மினிலாரியில் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்.
Updated on
1 min read

கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு கடத்தப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வருவதை தடுக்கும் விதமாக மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்றவற்றில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுகிறது என கடலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலில், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் மேற்பார்வையில், மாநகராட்சி நகர் அலுவலர் டாக்டர் அரவிந்த ஜோதி தலைமையில் சுகாதார ஆய்வாளர் சிவகுமார் மற்றும் பணியாளர்கள் இன்று கடலூர் மஞ்சக்குப்பம் ஆல் பேட்டை சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக பல்வேறு பொருட்கள், பார்சல் ஏற்றி வரும் மினி லாரி ஒன்று வந்தது. அதனை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடலூர் மாவட்டத்தில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மினி லாரி மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், புதுச்சேரியில் இருந்து நூதன முறையில் பார்சல் வண்டிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடலூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இரண்டு டன் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை அனுப்பி வைத்தது யார் என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in