ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க கைரேகைக்கு பதிலாக கருவிழிப் பதிவுக்கு ஏற்பாடு: அமைச்சர் தகவல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: ''கைரேகைக்கு பதிலாக கருவிழிப் பதிவு அடிப்படையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்று உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

சென்னையிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ''தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அரிசி மூடைகளை மழையால் சேதம் அடையாமல் பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை செய்யப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கூடுதலாக திருச்சி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு இரண்டு எஸ்பி-க்கள் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 286 குடோன்களில் இருந்து கொண்டு செல்லப்படும் அரிசி மூடைகள் எந்த குடோனில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது என்பது தெரியாததால் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை. இதனை தடுக்கும் விதமாக 286 குடோன்களில் இருந்து செல்லக்கூடிய அரிசி மூட்டைகளில் புதிதாக குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிசி கடத்தலை தடுக்க முடியும்.

ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் (கைரேகை) அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுகிறது. அதனால், மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை பரிந்துரை செய்கிறாரோ அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in