Published : 30 May 2022 11:40 AM
Last Updated : 30 May 2022 11:40 AM

'திமுக ஆட்சியில் தான் நிறைய பெண்கள் முன்னேற்ற திட்டங்கள் வரும்' - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. இன்றைக்கு வரலாற்றில் பேசக்கூடிய அளவிற்கு அவை எல்லாம் விளங்கிக் கொண்டிருக்கின்றன என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள எஸ்ஐஇடி (SIET) கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக் குழுவால், A++ தகுதியைப் பெற்றதற்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் பேசுகையில், "சென்னையில் ஆண்களுக்கென்று பல கல்லூரிகள் இருந்தாலும், பெண்களுக்கென்று தனியாக ஒரு கல்லூரி வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டதுதான் இந்தக் கல்லூரி. இந்தக் கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக் குழுவால், A++ தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இக் கல்லூரியின் வெற்றிப் பாதையில் இது ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது. இந்த சிறப்பானது மறைந்த நீதிபதி பஷீர் அகமதின் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது.

திறன்மிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை உருவாக்க தமிழக அரசு சார்பில் ’நான் முதல்வன்’ திட்டத்தை அறிவித்து அரசு அதனை எவ்வாறு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி, திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை, இன்றைக்கு வரலாற்றில் பேசக்கூடிய அளவிற்கு அவை எல்லாம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஆரம்பப் பள்ளிகளில் பெண்களைத்தான் கட்டாயமாக ஆசிரியராக நியமிக்கும் சட்டம் இப்படி பல திட்டங்களை சொல்ல முடியும்.

பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான், மகளிர் சுய உதவிக்குழுத் திட்டத்தை மறைந்த முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். அதே வழியில் பெண்களுக்கு கல்லூரி கல்வி வழங்கிய தீர வேண்டும் என்ற நோக்கத்தில்தான், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவியர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் பெண்கள் கல்வி நிதி உதவி திட்டத்தை அறிவித்து அதை நிறைவேற்றி வருகிறோம். தமிழக அரசைப் போலவே இந்த கல்லூரியும், பெண்களின் கல்வி உரிமைக்காக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருவது பாராட்டுதலுக்குரியது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x