Published : 30 May 2022 07:20 AM
Last Updated : 30 May 2022 07:20 AM

கோடை விழாவை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்: ஏற்காடு மலைப்பாதைகளில் வாகன நெரிசல்

கோடை விழாவை காண சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், ஏற்காடு மலைப்பாதை 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே எதிரும் புதிருமாக அணிவகுத்து நின்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படங்கள்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: கோடை விழாவை காண ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால், ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை தவிர்க்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 45-வது கோடை விழா மலர்க் கண்காட்சி கடந்த 25-ம் தேதி தொடங்கியது. 5 லட்சம் மலர்களைக் கொண்டு மலர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.

கோடை விழாவை காண சேலம் மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வந்து செல்கின்றனர்.

பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதை திட்டமிட்டு மாவட்ட நிர்வாகம் ஏற்காட்டுக்கு செல்லும் வாகனங்கள் சேலம் -அடிவாரம் மலைப்பாதை வழியாக செல்லவும். அங்கிருந்து திரும்பும் வாகனங்கள் ஏற்காடு - குப்பனூர் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தி இந்த இரு சாலைகளையும் ஒரு வழிப்பாதையாக அறிவித்தது.

இந்நிலையில், ஞாயிறு விடுமுறை நாளான நேற்று காலை முதல் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் பயணிகள் வந்திருந்தனர். அதேபோல ஏற்காட்டில் இருந்து சேலத்துக்கு திரும்பும் பயணிகளின் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருந்தது.

ஏற்காடு அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மலர்க் கண்காட்சியை காண குவிந்த
சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தின் ஒருபகுதி.

இதனால், ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்டிருந்த இரு மலைப்பாதைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. மேலும், ஒரு வழிப்பாதை நடைமுறையை பல வாகன ஓட்டிகள் பின்பற்றாததால், இரு மலைப்பாதைகளிலும் எதிரும் புதிருமாக வாகனங்கள் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல, ஏற்காடு பேருந்து நிலையம், அண்ணா பூங்காவையொட்டிய ரவுண்டானா, ரோஜாத்தோட்டம் செல்லும் சாலை, கரடியூர் காட்சிமுனை பகுதிக்குச் செல்லும் சாலை என பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லக்கூடிய அனைத்துச் சாலைகளிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் நெரிசல் ஏற்பட்டது. படகு இல்லத்திலும் கூட்டம் அலைமோதியது.

வரும் காலங்களில் நெரிசலை தவிர்க்கும் வகையில் மலைப்பாதை சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தினர்.

நாளை மறுநாள் (1-ம் தேதி) கோடை விழா நிறைவடைய உள்ளதால், இன்று முதல் 1-ம் தேதி வரை ஏற்காட்டுக்கு பயணிகள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x