Published : 28 May 2022 06:45 AM
Last Updated : 28 May 2022 06:45 AM

பாலக்கோடு அருகே பாறை இடுக்குகளில் சிறுத்தை பதுங்கியதா? - காப்புக்காட்டில் வனத்துறையினர் ஆய்வு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி காப்புக்காடு பகுதியில் பாறை இடுக்குகளில் சிறுத்தை பதுங்கியுள்ளதா என ஆய்வு நடத்திய வனத்துறையினர்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடமாடிய சிறுத்தை வனத்தில் பாறை இடுக்குகளில் பதுங்கியுள்ளதா என நேற்று வனத்துறையினர் நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு வட்டம் வாழைத்தோட்டம் கிராமத்தில் வனத்தை ஒட்டிய விளைநிலம் ஒன்றில் கடந்த 14-ம் தேதி இரவு சிறுத்தை நடமாடியது. ஒரு வீட்டருகே அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழியை வெளியில் இழுத்த சிறுத்தை, அதை துரத்தி வேட்டையாடிச் சென்றது. கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவாகி இருந்த இந்த காட்சி அப்பகுதி கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த பாலக்கோடு வனச்சரக அதிகாரிகள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி வாழைத்தோட்டம், காவேரியப்பன் கொட்டாய், எருதுகுட்டஅள்ளி உள்ளிட்ட மலையோர கிராமங்களில் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதி கிராம மக்களுக்கு சிறுத்தை நடமாட்டம் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர, கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில் ‘ட்ரோன்’ கேமராக்களை பறக்க விட்டும் சிறுத்தை நடமாட்டத்தை அறியும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின்னர், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். வனத்துறையினர் அப்பகுதியில் மேற்கொண்ட தொடர் கண்காணிப்புப் பணி காரணமாக சிறுத்தை வெளி நடமாட்டத்தை முற்றிலும் தவிர்த்து வந்தது.

இதனால், அப்பகுதியில் 2 வாரங்களாக கோழி, ஆடு போன்ற கால்நடைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இருப்பினும், வனத்துறையினர் சிறுத்தை தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நேற்று எர்ரனஅள்ளி காப்புக்காடு பகுதியில் பாறை இடுக்குகளில் சிறுத்தை பதுங்கியுள்ளதா என்பதை அறிய அப்பகுதி வன காவலர் பழனி தலைமையிலான வனத்துறையினர் நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, பாறை இடுக்குகளில் விலங்குகள் தங்கியிருப்பதற்கான சுவடு, அப்பகுதியில் பதிவாகி உள்ள விலங்குகளின் கால்தடம் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சிறுத்தை கால்தடம், பதுங்கி இருப்பதற்கான சுவடு போன்ற எதையும் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், அடுத்தடுத்த நாட்களிலும் இந்தப் பணியை தொடர இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x