

திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 232 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 98 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு 1 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள் அதாவது 39.7 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
அதிமுக அணிக்கு 1 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து 60 வாக்குகள் அதாவது 40.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதிமுக - திமுக அணிக்கு இடையே உள்ள வாக்குகள் வித்தியாசம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள் அதாவது 1.1 சதவீதம் மட்டுமே.
எப்படி என்றாலும் அதிமுக ஆளும் கட்சி. திமுக எதிர்க்கட்சி. சட்டப்பேரவையில் 89 உறுப்பினர்களைக் கொண்ட திமுகதான் பிரதான எதிர்க்கட்சி. திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மண்ணின் மைந்தன் என்ற முறையில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட நான் 1 லட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். தமிழகத் திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருவாரூர் மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.