Published : 28 May 2022 07:03 AM
Last Updated : 28 May 2022 07:03 AM

மதுரையில் மீட்கப்பட்ட யானை ‘ரூபாளி’ எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு

மதுரை: மதுரையில் தனிநபரிடமிருந்து மீட்கப்பட்ட ரூபாளி என்ற பெண் யானை நேற்று திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த மாலா என்பவர், ரூபாளி என்ற 20 வயது பெண் யானையை பிஹாரிலிருந்து வாங்கி வந்து வளர்த்து வந்தார். இதை வளர்க்க போதிய கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை எனவும், போலி ஆவணங்கள் மூலம் யானையை வாங்கிவந்துள்ளதாகவும் மதுரை மாவட்டவனத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, மதுரை மாவட்ட வனத் துறைக்கு தலைமை முதன்மை வனப் பாதுகாவலர் முஷாமில் அப்பாஸ் உத்தரவிட்டதன் பேரில், அந்த யானை மீட்கப்பட்டு திருச்சி எம்.ஆர்.பாளையத்திலுள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கு ரூபாளியை, வனச் சரகர் சரவணக்குமார் தலைமையிலான வனத் துறையினர் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர் மனோகர் தலைமையிலான குழுவினர், யானையின் உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். குளியல், உணவுக்குப் பின் சில மணி நேரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிய ரூபாளி, மறுவாழ்வு மையத்தில் இருந்த மற்ற யானைகளுடன் இணைந்து விளையாடியது.

இதனால், எம்.ஆர்.பாளையத்தில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்படும் யானைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x