Published : 27 May 2022 07:29 PM
Last Updated : 27 May 2022 07:29 PM

“அரசுக்கு திட்டமிட்டு நெருக்கடி ஏற்படுத்துவோரை இரும்புக் கரம் கொண்டு காவல் துறை அடக்க வேண்டும்” - ஸ்டாலின்

சென்னை: ”அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்த நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்று காவல் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையில் பதக்கங்களை பெற்ற 319 காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார். காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை உள்ளிட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: "இதுபோன்ற பதக்கங்கள், வீரதீரச் செயல்களுக்காக மட்டுமல்ல, பண்பாட்டு பதக்கங்களாகவும் மாறவேண்டும். காவல்துறை "உங்கள் நண்பன்" என்று சொல்கிறோம். அத்தகைய நண்பர்களாக இருப்பவர்களுக்கும், நண்பர்களாக நடந்து கொள்பவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட வேண்டும். மக்களின் காவலர்களாக இருந்து மக்களைக் காக்கும் பணியில் சிறந்து விளங்கக் கூடிய காவலர்களைப் பாராட்ட வேண்டும்.

காவல்துறை மக்களோடு நெருக்கமானால்தான் நாட்டில் குற்றங்கள் குறையும். மக்களிடம் இருந்து காவல்துறை விலகி இருந்தால், குற்றம் பெருகும். எனவே, "காவல்துறை நம் நண்பன்" என்று சொல்லத்தக்க விதத்தில் காவலர்கள் செயல்பட வேண்டும். காவல் நிலையங்கள் பொதுமக்களின் மக்கள் தொடர்பு பாதுகாப்பு அலுவலகங்களைப் போலச் செயல்பட வேண்டும். அந்தளவுக்கு அதன் செயல்பாடு அமைய வேண்டும்.

தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் இன்னொரு கை காவல்துறை என்பதை நான் சட்டமன்றத்திலேயே நான் சொல்லி இருக்கிறேன். இதன் மூலமாக காவல்துறைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் உணரலாம். காவல்துறை என்றாலே தண்டனையை வாங்கித் தரும் துறையாக மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலைகளை உருவாக்கித் தரும் துறையாக மாறவேண்டும் என்பதையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறேன்.

குற்றங்கள் எந்தச் சூழலிலும் நடைபெறாத ஒரு காலத்தை உருவாக்குவதற்கு காவல்துறை திட்டமிட வேண்டும் என்பதுதான் காவல்துறை தலைவர் முதல் காவலர்கள் வரைக்கும் நான் வைக்கக்கூடிய கோரிக்கை.ஒரே ஒரு காவலர் அல்லது ஒரு காவல் நிலையம் தனது கடமையைச் செய்யத் தவறும்போது, அது ஓட்டுமொத்தமாக காவல்துறைக்கே தலைக்குனிவை ஏற்படுத்துகிறது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

எந்த ஒரு காவலராக இருந்தாலும், அவரது செயல் காவல்துறையை தலைநிமிர வைக்க வேண்டுமே தவிர, தலைக்குனிவை ஏற்படுத்திவிடக் கூடாது. அத்தகைய எச்சரிக்கை உணர்வு, காவலர்கள் அனைவருக்கும் இருக்குமானால், குற்றச் சம்பவங்களே நடைபெறாத மாநிலமாகத் தமிழகம் மாறும்.

> எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

> அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்த நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

> போதைப் பொருட்கள் நடமாட்டம் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும்.

> கூலிப்படையினர் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும்.

> கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இத்தகைய நோக்கங்களைக் கொண்டதாக காவல்துறை கண்டிப்புடன் நடந்தாக வேண்டும். இத்தகைய சூழலை உருவாக்கி, ஒட்டுமொத்தமான அமைதிப் பதக்கத்தை தமிழகக் காவல்துறை பெறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். பெறுவீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

எல்லோருக்கும் எடுத்துக்காட்டான திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி - எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில் திட்டங்களை தீட்டி வருகிறோம். இவை அனைத்துக்கும் அடிப்படை அமைதிதான். அமைதியான சூழலில்தான் தொழில் வளர்ச்சியாக இருந்தாலும் - சமூக முன்னேற்றமாக இருந்தாலும் அது ஏற்படும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்தை நோக்கி புதிய புதிய தொழிற்சாலைகள் வருகின்றன என்றால், தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிற காரணத்தால்தான். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என்றால், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால்தான். அத்தகைய அமைதிச் சூழலை காக்க வேண்டும். அதற்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடிய சிறு சம்பவமும் நடைபெறக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்த நான் விரும்புகிறேன்.

மக்களைக் காக்கும் கடமை காவலர்களாகிய உங்களுக்கு இருக்கிறது. அதேபோல், காவலர்களாகிய உங்களைக் காக்கக்கூடிய கடமை அரசுக்கும் இருக்கிறது. அதை மனதில் வைத்து ஏராளமான திட்டங்களை கடந்த ஓராண்டு காலத்தில் தீட்டி இருக்கிறோம்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு காவல் துறையினரது கோரிக்கைகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, அவை படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்ற உறுதியை இந்த நிகழ்ச்சியின் மூலமாக அறிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவை மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுகிறேன். வீர தீர செயல் புரிந்த காவல் அதிகாரிகள், காவலர்கள் அல்லது வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் வீரப்பதக்கங்களுக்கான ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள், மத்திய அரசு வழங்கக்கூடிய, குடியரசுத் தலைவர் வீரப் பதக்கத்திற்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை மற்றும் சலுகைகளுக்கு இணையாக வழங்கப்படும்.

காவலர்களது நலனை அரசு கண்ணும் கருத்துமாகப் பேணிக் காப்பாற்றும். மக்களின் நலனைக் காவலர்களாகிய நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டு, பதக்கம் பெற்றவர்கள் அனைவரையும் மீண்டும் வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x