Published : 26 May 2022 06:23 PM
Last Updated : 26 May 2022 06:23 PM

மதுரை மேயர் காரை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்: அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிருப்தி

மதுரை மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை மாநகராட்சி செய்து கொடுக்காததால் பூமி பூஜை விழாவில் பங்கேற்க வந்த மதுரை மேயர் இந்திராணியின் காரை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாநகராட்சி 97-வது வார்டு நிலையூர் அருகே உள்ள துர்கா காலனி பகுதியில் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது. மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமை வகித்து பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும், அவர் தன்னுடைய அரசு காரில் ஏறி மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்கு புறப்பட முயன்றார். திடீரென்று அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத மாநகராட்சியைக் கண்டித்து மேயர் இந்திராணி காரை சிறைப்பிடித்து அவரது காரின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து “உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம், மேயர் கார் செல்வதற்கு வழிவிடுங்கள்” என்றனர். அதிருப்தியடைந்த பொதுமக்கள் “அனைத்து வரிகளையும் மாநகராட்சி கறாராக வசூல் செய்கிறது, ஆனால், மக்களுடைய அடிப்படை வசதிகளை மட்டும் செய்து கொடுப்பதில்லை, விழாவில் பங்கேற்க மட்டும் வந்து செல்கிறீர்களா?” என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “தேர்தலின்போது என்ன வாக்குறுதிகள் வழங்கினீர்கள், அதை நிறைவேற்றினீர்களா?” என்று கேட்டு மாநகராட்சி அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர்.

காரை மறித்து போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டபோது, காரிலே அமர்ந்து கொண்டிருந்தார் மேயர். அது மக்களை மேலும் கோபமடைய செய்தது. நிலைமை மோசமடையவே மாநகராட்சி அதிகாரிகளே ஒரு வழியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேண்டுகோள் விடுத்து சமாதானம் செய்து மாநகராட்சி மேயரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அரைமணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x