Last Updated : 03 May, 2016 02:15 PM

 

Published : 03 May 2016 02:15 PM
Last Updated : 03 May 2016 02:15 PM

கோடந்தூர் மலை கிராம பள்ளியில் ஆசிரியர்கள் இருந்தும் படிப்பதற்கு சீராக மாணவர்கள் வருவதில்லை: தலைமையாசிரியர் வேதனை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது கோடந்தூர் மலை கிராமம். இங்கு 600-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை, மருத்துவம், பாசன வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. அவர்களிடையே போதிய கல்வி அறிவும் இல்லை. கடந்த 2001-ம் ஆண்டு அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இதன்மூலமாக மலைவாழ் மக்கள் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியொரு மாற்றம் ஏதுமில்லை. இத்தனை ஆண்டுகளாக பள்ளி செயல்பட்டதே பெரிய சாதனை என்கின்றனர் ஆசிரியர்கள்.

நடப்பு ஆண்டில் சுமார் 22 மாணவர்களில், ஒற்றை இலக்கில் தான் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். இதுவரை 5-ம் வகுப்புக்கும் மேல் கல்வியை தொடர்வதில்லை என்றும், 40 கி.மீ. தொலைவிலுள்ள உடுமலையில் விடுதிகளில் தங்கி தான் கல்வியை தொடர முடியும் என்பதாலும், படிப்பை 5-ம் வகுப்போடு நிறுத்திவிடுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் சின்னப்பன் கூறும்போது, ‘மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்ற எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியவில்லை. மாணவர்களில் சிலர், ஆண்டுக் கணக்கில் முடி கூட வெட்டுவதில்லை. பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதே, பழைய மாணவர்கள் வெளியில் இருந்து அழைத்தவுடன் சென்று விடுகின்றனர்.

மதிய உணவுக்குப் பின் வகுப்புகளுக்கு வருவார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது. பெற்றோர்களிடம் எடுத்துக் கூறினாலும் கண்டுகொள் வதில்லை. மீறி மாணவர்களை கண்டித்தால், அதன் விளைவாக எனது மோட்டார் சைக்கிள் அடிக்கடி பஞ்சராகிவிடும், அல்லது காட்டு வழியில் செல்லும்போது கற்களில் அடி விழும். பெற்றோர், மாணவர்களின் எண்ணம் மாறினால்தான் எதிர்காலம் சிறக்கும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x