Published : 26 May 2022 06:41 AM
Last Updated : 26 May 2022 06:41 AM

ரூ.31,400 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை - பாதுகாப்பு பணியில் 22 ஆயிரம் போலீஸார்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். விழா நடக்கும் பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.படம்: ம.பிரபு

சென்னை: அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக அரசு முறை பயணமாக இன்று சென்னை வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் ஹைதராபாத் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு இன்று மாலை 5.15 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு தளத்துக்கு வரும் பிரதமர், அங்கிருந்து காரில் புறப்பட்டு 5.45 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகிறார். அங்கு, நடக்கும் விழாவில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தும் உரையாற்றுகிறார்.

சென்னை - பெங்களூரு இடையே ஆந்திரா வழியாக ரூ.14,870 கோடி மதிப்பில் 262 கி.மீ. விரைவுச்சாலை, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே 21 கி.மீட்டருக்கு ரூ.5,850 கோடியில் இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்ட சாலை, நெரலூரு- தருமபுரி இடையே ரூ.3,870 கோடியில் 4 வழிச்சாலை, ரூ.720 கோடியில் மீன்சுருட்டி - சிதம்பரம் நான்கு வழிச்சாலை ஆகிய சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை எழும்பூர், ராமேசுவரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் ரூ.1,800 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன. சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை அருகே மப்பேட்டில் ரூ.1,400 கோடியில் பன்மாதிரி போக்குவரத்து பூங்கா (மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்) அமைக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் உட்பட மொத்தம் ரூ.28,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

அத்துடன், ரூ.2,900 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 5 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மதுரை - தேனி இடையே ரூ.500 கோடியில் மேம்படுத்தப்பட்ட அகல ரயில் பாதை, சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.590 கோடியில் 3-வது ரயில் பாதை, எண்ணூர் - செங்கல்பட்டு இடையே ரூ.850 கோடியில் 115 கி.மீ. நீளத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் திட்டம், திருவள்ளூர் - பெங்களூரு இடையே 271 கி.மீ. தொலைவில் 910 கோடியிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,152 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரஸ்வதி, காந்தி உள்ளிட்டோரை நிகழ்ச்சி அரங்கில் பிரதமர் சந்தித்து பேசுகிறார். இதைத் தொடர்ந்து இரவு 7.05 மணிக்கு புறப்பட்டு மீண்டும் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் விமான நிலையம் வந்து சேர்கிறார். இரவு 7.40 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதனிடையே, சென்னை வரும் பிரதமர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்து, மீண்டும் சாலை மார்க்கமாகவே விமான நிலையம் திரும்பும் வகையிலும் பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட வரவேற்பு

சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு சென்றால், நேப்பியர் பாலம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை ஆயிரக்கணக்கான கட்சியிரை திரட்டி வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.

பிரதமரின் வருகையையொட்டி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 கூடுதல் ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள், டிஐஜிக்கள், 29 துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட மொத்தம் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நிகழ்ச்சி நடக்கும் பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு, அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணிக்கப்படுகிறது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x